Also Watch
Read this
By: Manigandan Raja

திருவாரூர் மாவட்டத்தில் மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாத நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடி நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பும், கவலையும் விவசாயிகள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்நிலையில், காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்காமல், ஆழ்குழாய் கிணறுகளை நம்பி விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முன்பட்ட குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட கோடை நெற்பயிர்களும் பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. இத்தகைய சூழலில், விவசாயிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மின்சாரம் முறையாக கிடைக்காததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குடவாசல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளை அதம்பார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மின்னழுத்த குறைபாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட வேண்டிய மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படவில்லை என்றும், இரண்டு ஷிப்ட் முறையில் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வழங்கப்படும் மின்சாரமும் போதிய மின்னழுத்தம் இன்றி குறைந்த அழுத்தத்தில் இருப்பதால் ஆழ்குழாய் கிணறு மோட்டார்களை முழு திறனில் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதடைந்து, அவற்றை பழுதுபார்க்க விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், நெற்பயிர்களுக்கு தேவையான பாசன நீரை வழங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாகவும், இதே நிலை தொடர்ந்தால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேட்டூர் அணை நீர் திறக்கப்படாத சூழ்நிலையில், ஆழ்குழாய் கிணறுகளை மட்டுமே நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் தற்போது மின்சார விநியோகத்தைச் சார்ந்தே உள்ளன. எனவே மின்னழுத்த பிரச்சினை மற்றும் மும்முனை மின்சார தட்டுப்பாடு உடனடியாக சரிசெய்யப்படாவிட்டால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசும், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு தேவையான நேரங்களில் சீரான மும்முனை மின்சாரத்தை போதிய மின்னழுத்தத்துடன் வழங்க வேண்டும்.
மேலும் மாவட்டம் முழுவதும் நிலவி வரும் மின்னழுத்த குறைபாடுகளை விரைந்து சரிசெய்து, குறுவை மற்றும் கோடை நெல் சாகுபடிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved