news-tamil-logo

3/19/2026, 5:52:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூங்கா நகரத்தை மிரள வைத்த கிரைம்
tv

Also Watch

tv

Read this

தூங்கா நகரத்தை மிரள வைத்த கிரைம்

மதுரை

Posted on: Jan 28, 2026 01:51 PM

70

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கடந்த 23 ஆண்டுகளாக 21 கொலைகள் 4 என்கவுண்டர் என 25 உயிர்களை காவு வாங்கி தூங்கா நகரத்தையே மிரள வைத்துள்ளது.. பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்யும் நோக்கில் காவல் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கொட்டு ராஜா என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் 23 ஆண்டுகால பகை உருவானது எப்படி? அந்த பகை இத்தனை ஆண்டுகளாகியும் நீர்த்துப்போகாதது ஏன்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த கிரைம் தொகுப்பு.

போஸ்டரால் ஆரம்பித்த மோதல்
ராமநாதபுரம் மாவட்டம், கருத்தறிவான் கிராமத்தை சேர்ந்த வீ.கே.குருசாமி மற்றும் ராஜபாண்டி இருவருமே உறவினர்கள். இருவரும் சிறுவர்களாக இருந்தபோதே இவர்களின் குடும்பத்தினர் மதுரை கீரைத்துறையில் வந்து குடியேறிவிட்டனர். சில வருடங்களுக்குப்பின் இருவருக்கும் அரும்பு மீசை எட்டிப்பார்க்க, அரசியல் பக்கம் தாவும் ஆசையும் எட்டிப் பார்த்துள்ளது. இதனால், வீ.கே.குருசாமி திமுகவிலும், ராஜபாண்டி அதிமுகவிலும் இணைந்தனர். அவர்களின் ஆசைக்கு தீனி போடும் வகையில், 2003ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலும் வந்தது. வீ.கே.குருசாமி தரப்பினரும், ராஜபாண்டி தரப்பினரும் போட்டிபோட்டு நகர் முழுக்க போஸ்டர்களை ஒட்ட, அதுவே பகைப்போட்டிக்கு ஆரம்ப புள்ளியாகவும் இருந்தது. இருதரப்பினரும் மாறி மாறி எதிர்தரப்பு போஸ்டர்களை கிழிக்க, கடைசியில் அது வெட்டு குத்தில் முடிந்தது.

தான் அடிபட்ட பாம்பு, சின்ன முனீஸ் மிரட்டல்

ராஜபாண்டியின் வலது கை போன்று இருந்த அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸை, குருசாமி தரப்பு அடித்து கீழே தள்ளிய சம்பவம் நடந்தது. அதில் நிலைகுலைந்து கிடந்த சின்ன முனீஸ், தற்போதே தனது உயிரை நீங்கள் எடுத்துவிட்டால் உங்கள் உயிர் மிஞ்சும், இல்லாவிட்டால் என் கையால் உங்கள் கூட்டத்துக்கே ஆபத்து, நான் அடிபட்ட பாம்பு என எதிர்தரப்பின் கோபத்தை தூண்டி உள்ளார். அதைக்கேட்டு, வெறியான வீ.கே.குருசாமி தரப்பு சின்ன முனீஸை தங்கள் அரிவாளுக்கு இரையாக்கினர். இதுதான், இந்த 23 ஆண்டுகால பகை அத்தியாயத்தின் முதல் கொலை. இந்த கொலை வழக்கில் வீ.கே.குருசாமி, பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமூர்த்தி, வழுக்கை முனீஸ், கணுக்கன் முனியசாமி உள்ளிட்ட 12 பேர் சிறைக்கு கம்பி எண்ண சென்றனர்.

பழிக்குப்பழி, ரத்தத்திற்கு ரத்தம்
இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது 2006-ம் ஆண்டு வீ.கே.குருசாமி மதுரை மாநகராட்சி திமுக கிழக்கு மண்டலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இருதரப்புக்குமான பகை மட்டும் ஆறவே இல்லை. சின்ன முனீஸ் கொலைக்கு பழிக்குப்பழியாக கடந்த 2008-ம் ஆண்டு வழுக்கை முனீஸை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் ராஜபாண்டியின் உறவினர் சப்பாணி முருகன். உறவினருக்கே இந்த கோபம் என்றால் உடன்பிறந்த தம்பிக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா? சின்ன முனீஸின் உடன்பிறந்த தம்பியான வெள்ளைக்காளி, வீ.கே.குருசாமியின் உறவினர்களான மாரிமுத்து மற்றும் ராமமூர்த்தியை வில்லாபுரத்தில் வெட்டிக் கொலை செய்து தன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைய 2 உயிர்களை சமர்ப்பணம் செய்தார். இந்த கொலை தொடர்பாக, வெள்ளைக்காளி, அவரது உறவினர் சகுனி கார்த்திக் உள்ளிட்ட சிலரை தூக்கி போலீசார் சிறையில் வைத்தனர். இந்த சிறைவாசத்தில்தான், வெள்ளைக்காளிக்கு பிரபல ரவுடி இருளாண்டியின் நட்பு கிடைத்துள்ளது.

மச்சான், தாய் மாமன் என தொடர்ந்தது
அந்த நட்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வெள்ளைக்காளி, 2013 ஆம் ஆண்டு வீ.கே.குருசாமியின் மச்சான் பாம்பு பாண்டியை வெங்காய மார்க்கெட்டில் வைத்து சகுனி கார்த்தி, முத்து இருளாண்டி ஆகியோருடன் சேர்ந்து வெட்டிக் கொன்று போட்டார். இதனால், ஆத்திரமடைந்த குருசாமி தரப்பு, அதே ஆண்டிலேயே நடனா தியேட்டர் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த சகுனி கார்த்தியின் தாய் மாமன் மயில் முருகனை அரிவாளால் வேட்டையாடினர். இந்த கொலை வழக்கில் குருசாமியின் மகன் மணி உள்ளிட்ட சிலரின் கையில் விலங்கு மாட்டப்பட்டது. இந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்க 2 ஆண்டுகளாக காத்திருந்த வெள்ளைக்காளியும், ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனியசாமியும் சேர்ந்து மணியின் நெருங்கிய நண்பர் குப்பு என்ற முனியசாமியை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் மணியும், கணுக்கனும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர்.

Related Link
வரதட்சணை கொடுமையால் மனைவி விபரீத முடிவு

வரதட்சணை கொடுமையால் மனைவி விபரீத முடிவு


காக்கிக்கும் வெட்டு விழும்.. மிரட்டல் ஆடியோ
இந்த பகையின் நீட்சியாக, குருசாமியின் மகளின் கணவர் எம்.எஸ்.பாண்டியனின் தம்பியான காட்டு ராஜா கமுதி அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து பேருந்துக்குள்ளேயே வைத்து வெள்ளக்காளி தரப்பினர் வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 2016-ல் நடந்த இந்த கொலைக் கணக்கை அடுத்த ஆண்டிலேயே தீர்த்தார் குருசாமியின் மகன் மணி. ராஜபாண்டியின் மகன் தொப்பிலி முனுசாமியை கமுதிக்கு கடத்தி சென்று பைக்குடன் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து தனது கொலைவெறியை தீர்த்துக் கொண்டார். இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில், சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி ஆகியோர் குருசாமியின் ஆதரவாளரான சடையாண்டியை மதுரை அரசு மருத்துவமனையில் வைத்தே வெட்டி கொன்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் அனுப்பிய ஆடியோ காவல்துறையையே மிரள வைத்தது. சடையாண்டி உயிர் சாம்பிள்தான் இனிமேல்தான் வீ.கே.குருசாமி, அவரது மகன் மணி உயிரையே காவு வாங்க போகிறோம், காப்பாற்ற வந்தால் உங்களுக்கும் வெட்டு விழும் என காவல்துறைக்கே கொலை மிரட்டலும் விடுத்திருந்தனர்.

குறி வைத்து அரங்கேறிய சம்பவங்கள்
இந்த மிரட்டலையடுத்து சிக்கந்தர் சாவடியில் உள்ள மாயக்கண்ணன் வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் சுற்றி வளைக்க காக்கிகள் ரவுண்டு கட்டியபோது தப்பி ஓடி உள்ளனர். அப்போது, சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி இருவரும் எண்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டருக்கு பின்னால் குருசாமிதான் உள்ளதாக கருதிய எதிர்தரப்பு, அவரது மருமகன் எம்.எஸ்.பாண்டி என நினைத்து, உறவுக்காரர் முனியசாமியை கீழ்மதுரை ரேஷன் கடையில் வைத்து 2018-ல் கொலை செய்தனர். ஆனாலும், எம்.எஸ்.பாண்டிக்கு வைத்த குறியில் இருந்து பின்வாங்காத வெள்ளைக்காளி கும்பல் 2019-ல் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அவரை ஓட ஓட வெட்டி உயிரை எடுத்தனர். அடுத்து, வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த குல்லா என்ற முத்துப்பாண்டி உயிரை 2020-ல் குருசாமி தரப்பு குடிக்க, மாடு மணி உள்ளிட்ட சிலர் கம்பி எண்ண சென்றனர். அதே ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி வெள்ளைக்காளிக்கு பிறந்த நாள் பரிசு எனக்கூறி அவரது டீமில் உள்ளவர்கள் குருசாமியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் அகோரி கார்த்தி, டோரி மாரி, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பழி தீர்க்கப்பட்ட கிளாமர் காளி
இதற்கு மத்தியில், சடையாண்டியின் மகன் முனியசாமியை குருசாமியின் ஆதரவாளர் வகுத்தாலை என்ற மணி மிரட்டி உள்ளார். இதனால், வகுத்தாலையின் நண்பர் முருகானந்தம் நடுரோட்டில் தலையை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், 2023-ல் குருசாமியை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில் பலத்த காயமடைந்த அவர், தற்போதுவரை சிகிச்சையில்தான் உள்ளார். அதேபோன்று ராஜபாண்டியும் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனிடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் வீ.கே.குருசாமியின் தங்கை மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் காளியை வெள்ளைக்காளி டீம் மொட்டமலை பகுதியில் வைத்து வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் குட்டபாண்டி என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் வெள்ளைக்காளியின் தாய் ஜெயக்கொடி, பாலகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன், நந்தகுமார், நவீன்குமார், கார்த்திக், அசன் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனிடையே வெள்ளைக்காளி தரப்பில் உள்ள சுபாஷ் சந்திரபோஸை போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

Related Link
மே திருமணம், ஜனவரியில் சம்பவம்

மே திருமணம், ஜனவரியில் சம்பவம்


நாட்டு வெடிகுண்டு வீச்சு
இந்நிலையில், திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெள்ளைக்காளியை கடந்த 24 ஆம் தேதி ஒரு வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சென்னையிலுள்ள புழல் மத்திய சிறையில் அடைப்பதற்காக காவல் வாகனத்தில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு ஓட்டலில் உணவு சாப்பிடுவதற்காக காவல் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது, 2 கார்களில் வந்த ஒரு கும்பல் உணவு அருந்திக்கொண்டிருந்த அவர்கள் மீது திடீரென நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்த வெடிகுண்டு சத்தத்தை பயன்படுத்தி அந்த கும்பல் ரவுடி வெள்ளைக்காளியை வெட்டிக் கொலை செய்ய முயன்றனர். இதில் வெள்ளைக்காளி தப்பிய நிலையில் காவலர் மருதுபாண்டிக்கு காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு வீசியவர்களை போலீசார் துரத்திய நிலையில் ஒரத்தூர் சுங்கச்சாவடி தடுப்புகளில் மோதிவிட்டு ஒரு கார் நிற்காமல் சென்றது. நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வந்த நிலையில், வீ.கே.குருசாமி மற்றும் ராஜபாண்டி தரப்பு பகை VKG மணி மற்றும் வெள்ளைக்காளி தரப்பு பகையாக மாறி மோதல் அடுத்தகட்டத்தை எட்டியதாகவும், மணியின் மச்சான் அழகுராஜாதான் வெள்ளைக்காளியை கொலை செய்யும்நோக்கில் இந்த வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


23 ஆண்டுகளில் 25 உயிர்கள்
இதனை தொடர்ந்து மதுரை மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த அழகுராஜா என்ற கொட்டு ராஜாவை கைது செய்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, திடீரென காவல் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய கொட்டு ராஜா எஸ்.ஐ.சங்கரை அரிவாளால் வெட்டினார். அப்போது சுதாரித்த மங்களமேடு காவல் ஆய்வாளர் நந்தகுமார், கொட்டு ராஜாவை துப்பாக்கியால் சுட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நாட்டு வெடிகுண்டு வீச்சில் தொடர்புடைய அழகுராஜாவின் கூட்டாளிகளான கார்த்திக், அலெக்ஸ் பாண்டியன், அரவிந்த், வினோத்குமார், பாண்டி முனிஸ்வரன் மற்றும் நிர்மல்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒற்றை போஸ்டரால் உருவான பகை கடந்த 23 வருடங்களில் 21 கொலைகள், 4 என்கவுன்டர்கள் என 25 உயிர்களை காவு வாங்கி உள்ளது. இந்த உயிர்காவு இதோடு நிற்க வேண்டும், இனிமேலும் தொடரக்கூடாது என்பது தான் தூங்கா நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Link
மூதாட்டியை குழி தோண்டி புதைத்த குடும்பத்தினர்

மூதாட்டியை குழி தோண்டி புதைத்த குடும்பத்தினர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
13 hrs 4 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved