Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 08:08 AM
By: Manigandan Raja
நாய் கடித்து சிகிச்சை பெறாமல் இருந்து, நாயை போல செய்கை செய்து இறந்தவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கீரிப்பிள்ளை கடித்து கீரியை போலவே செய்கை செய்து உயிரிழந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் புதுத் தெருவை சேர்ந்த முத்து - தேவி தம்பதியரின் 7 வயது மகன் நவீன், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீட்டில் கோழிகள் வளர்த்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கோழியை உண்ண வந்த கீரிப்பிள்ளை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் நவீனின் கையை கடித்துள்ளது.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நவீனின் கையை கடித்த கீரி
இதனால், சிறுவன் வலியால் அலறித் துடித்த நிலையில், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அப்போதைக்கு ஊசி போட்டுவிட்டு, அதன் பிறகு சிகிச்சை பெறாமல் அசட்டையாக இருந்துள்ளனர். இந்த சூழலில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறுவன் நவீனுக்கு திடீரென காய்ச்சல் அடிக்கத் தொடங்கியுள்ளது. உடம்பு முழுதும் அனலாக கொதித்ததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கீரியை போலவே சிறுவன் செய்கை
அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென காய்ச்சல் அதிகமாகி கீரியை போலவே சிறுவன் செய்கை செய்ததால் பெற்றோரும், மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சிகிச்சை பலனின்றி சிறுவன் நவீன் உயிரிழந்த நிலையில், அவனது உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகமே அடக்கம் செய்தது.
கீரி கடிக்குக் கூட மருத்துவம் இல்லையா?
கீரிப்பிள்ளை கடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், கீரி கடிக்குக் கூட மருத்துவம் இல்லையா? என சிறுவனின் பெற்றோரும், பொதுமக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved