Also Watch
Read this
பெரும்பான்மையோடு, அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெருங்குகிறது சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், 234 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது.

இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தனது வேட்பு மனுவை, இன்று ஏப்ரல் 6ஆம் தேதி, தாக்கல் செய்தார். 8ஆவது முறையாக எடப்பாடியில், இபிஎஸ் களம் காண்கிறார்.

210 தொகுதிகளில் வெற்றி
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு இபிஎஸ் கூறியதாவது;
தமிழகத்தில் 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும். வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள பிரதமர் மோடியின் குமரி பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளேன். துணை முதல்வர் உதயநிதியே சிபிஎஸ்சி பள்ளி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர்கள் பள்ளி நடத்தினால் என்ன மொழியை வேண்டுமானாலும் அனுமதிப்பார்கள்.

அனைத்து திட்டங்களும் தொடரும்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தொடரும். எடப்பாடி மக்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். ஒன்று இரண்டு கோரிக்கைகள் விடுபட்டிருந்தால் அதையும் நிறைவேற்றுவேன்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில், திமுக டெல்லியுடன் ஏன் போட்டி போட வேண்டும்? திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய ஆடியோ வைரலானது. அது குறித்து தான் நான் கருத்து சொன்னேன். அவரை விட்டுவிட்டு என்மேல் பாய்வதில் என்ன இருக்கிறது. பெரும்பான்மையோடு அதிமுக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved