Also Watch
Read this
ராணிப்பேட்டை தொகுதியை தனது தந்தை காந்திக்கு விட்டுக் கொடுப்பதாக அவரது மகன் வினோத் காந்தி அறிவித்து உள்ளார். தனது தந்தை மீண்டும் போட்டியிட விரும்புவதை கருத்தில் கொண்டு, மரியாதையுடன் மீண்டும் ஒப்படைப்பதாக உருக்கம் தெரிவித்து உள்ளார்.

திமுக அமைச்சர்கள்...
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி ஆகிய மூவருக்கும் திமுகவில் சீட் மறுக்கப்பட்டது. ஆனால், காந்தியின் மகன் வினோத் காந்தி, ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. தனக்கு சீட் அறிவிக்கப்படாததால், காந்தி அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனது தந்தைக்காக வினோத் காந்தி ராணிப்பேட்டையில் போட்டியிடுவதில் இருந்து விலகி உள்ளார்.

மரியாதையுடன்...
இதுகுறித்து வினோத் காந்தி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளேன்.

நீண்ட வாழ்க்கை, உறுதி
என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்
இவ்வாறு வினோத் காந்தி பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved