Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் வரவேற்கிறோம் :
மேற்காசியாவில் பதற்றத்தை தணிக்க உதவும் வகையில், இந்தியா எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் வரவேற்பதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்துள்ள அவர், இந்தியா எப்போதும் அமைதியை ஆதரித்து வருவதாகவும், எப்போதும் அமைதிக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஐநா குழந்தைகள் நிதியமான யுனிசெப் கண்டனம் :
மேற்குக்கரையில் 2025 ஜனவரி முதல் குறைந்தது 70 பாலஸ்தீனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 850-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும், யுனிசெப் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களால் குழந்தைகள் கொல்லப்படுவது மற்றும் காயமடைவது அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளது.
இளைஞர்கள், ராணுவத்தினர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு :

அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முறை பயணமாக நேற்று மாலை சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்றடைந்தார். அவரை, சீன துணை அதிபர் ஹான் ஸெங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
மேலும், சுமார் 300 சீன இளைஞர்கள் மற்றும் ராணுவத்தினரால் அதிபர் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனமழையால் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்த வெள்ளம் :

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் ஆறு போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிகள், காவல் நிலையம், மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதே போல் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்த 15-வது எல்பிஜி கப்பல் :

இந்தியாவின் எம்வி சன் ஷைன் என்கிற எல்பிஜி கப்பல், பாரசீக வளைகுடாவில் இருந்து ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவுக்கு வரும் 15-வது எல்பிஜி கப்பல் இது எனவும், இந்திய கடற்படை பாதுகாப்பாக கப்பலை அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved