ஐநா பாதுகாப்பு கவுன்சில் நடத்திய ரகசிய அவசர கூட்டத்தில், பாகிஸ்தான் மீது உறுப்பு நாடுகள் காரசாரமான கேள்விகளை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானின் வேண்டுகோளின் படி, கிரீஸ் தலைமையிலான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம், இரு நாடுகளும் எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆசியாவுக்கான உதவி தலைமை செயலாளர் காலித் முகம்மது கியாரி எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா பொறுமை காக்குமாறு கூறியதாகவும், பாகிஸ்தான் தூதரிடம் கிடுக்கிப் பிடி கேள்விகளை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. நிலைமை பதற்றமாக இருந்தாலும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்குமாறு பெரும்பாலான உறுப்பு நாடுகள் அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.