Also Watch
Read this
தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினர். நான்கு முனை போட்டியில் பந்தயம் அடிப்பது யார்? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்து தேர்தல் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

முதல்வர் மு.க.ஸ்டாலின்...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வாக்குப்பதிவு ஆகியிருக்கும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் வாக்கு செலுத்தினர். அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி., கல்லூரி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்திருந்த முதலமைச்சர், மக்களோடு மக்களாக நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மனைவி கிருத்திகா, மகன் இன்ப நிதி, மகள் ஆகியோருடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். ஜனநாயக கடமை ஆற்றிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இபிஎஸ் வாக்குப்பதிவு
தனது சொந்த ஊரான சேலம், சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். வாக்கு பதிவு முடிந்ததும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

நீலாங்கரையில் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய், நீலாங்கரை வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்படும் போதே தொண்டர்கள் புடை சூழ காரில் புறப்பட்டுச் சென்ற விஜய், மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார். விஜய்யை பார்க்க வாக்குச்சாவடியில் ஏற்கனவே ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில், போலீசாரும், பவுன்சர்களும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

நீலாங்கரையில் இருந்து காரைக்குடி
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தாம் வசிக்கும் நீலாங்கரை பகுதியில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மனைவி கயல்விழியுடன் வந்து வாக்குப் பதிவு செய்த பின்னர் தாம் போட்டியிடும் காரைக்குடி தொகுதிக்கு புறப்பட்டுச் சென்றார்.

மாற்றத்தை விரும்பும் மக்கள்
தனது சொந்த ஊரான நெல்லை பாளையங்கோட்டையில் வாக்கு செலுத்திய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணம் ஈடேறும் என்றார். தாம் போட்டியிடும் சொந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தனது ஓட்டை பதிவு செய்தார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை. மனைவி, மகளுடன் சென்று ஜன
நாயக கடமையாற்றினார்.

அன்புமணி வாக்குப்பதிவு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் தனது மூன்று மகள்களுடன் வந்து வாக்கு செலுத்தினர். தியாகராய நகர் அரசுப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். அதேபோல அன்புமணி ராமதாஸின் மனைவியும், தருமபுரி தொகுதி வேட்பாளருமான சௌமியா அன்புமணியும் தியாகராய நகர் வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார்.

தலைவர்கள் வாக்குப்பதிவு
விசிக தலைவர் திருமாவளவன், தனது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் சென்னை ஆவடியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் வியாசர்பாடியிலும் வாக்குப்பதிவு செய்தனர். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோருடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.

வைகோ வாக்குப்பதிவு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் தென்காசி மாவட்டத்திலுள்ள சொந்த கிராமமான கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப் பதிவு செய்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அடையாறிலுள்ள வாக்குச்சாவடியில் மனைவி, மகளுடன் சென்று வாக்குப்பதிவு செய்தார். அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் வி.கே.சசிகலா, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved