Also Watch
Read this
Posted on: Jan 19, 2026 06:19 AM
By: Manigandan Raja
டெல்லி சிபிஐ அலுவலகத்தில், தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை ஆஜரான போது அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செப்.27ல் நடைபெற்ற சம்பவம்
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விஜயிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது.
டில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய்
இந்நிலையில், டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில், தவெக தலைவர் விஜய் கடந்த 12ஆம் தேதி ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தினர். விஜயிடம் விசாரணை முடியாத நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பின்னர் விசாரணைக்கு ஆஜராவதாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பினர்.
2ஆவது முறையாக விஜய் ஆஜர்
இதனை ஏற்றுக்கொண்ட விஜய், இரண்டாவது முறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் நேற்று டில்லி சென்றார். டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜரானார். இன்று மாலை வரை விசாரணை நடத்தவும், பல்வேறு கேள்விகளை எழுப்பவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
போர்டிகோ வரை சென்ற கார்
முதல் நாள் விசாரணைக்கு வந்தது போலவே, இன்றும் விஜய் கார் சிபிஐ அலுவலகத்தின் போர்டிகோ வரை சென்று நிறுத்தப்பட்டது. காரில் கண்ணாடி பொருத்தி மறைத்து இருந்ததால், யாரும் படம்பிடிக்க முடியவில்லை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved