Also Watch
Read this
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தவெகவுக்கு இல்லை என்று, ஆளுநர் அர்லேகர் விஜய்யிடம் விளக்கம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயை அழைத்து பேசியது தொடர்பாக, ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பும் வெளியிட்டு உள்ளது.

ஆளுநர் விஜய்க்கு அழைப்பு
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார். அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும்
ஆட்சி அமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை, பெரும்பான்மை பலம் விஜய்யிடம் இல்லாததால், அதை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆளுநருடன் விஜய் சந்திப்பு
தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று மே 6ஆம் தேதி சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இந்நிலையில், இன்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்றார். இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது.

நிலையான அரசு
ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இதுவரை மவுனம் கலைக்கப்படவில்லை. இந்த சந்திப்பின் போது, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் எடுத்துரைத்ததாகத் தெரிய வந்துள்ளது. விஜய் - ஆளுநர் சந்திப்பு இணக்கமாகவே இருந்ததாகவும், நிலையான அரசு மற்றும் பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திய பிறகே, ஆட்சி அமைக்க உரிமை கோரி அளித்த கடிதத்தை பரிசீலிக்க முடியும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதையே ஆளுநர் விரும்புகிறார். பெரும்பான்மை பலம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, விஜய் பதவியேற்கலாம் என்றும் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved