Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக்கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அரசியல் கட்சியினர் மத்தியில்...
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி யாருக்கு என்ன சர்ப்ரைஸ் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்களுக்கு விடிந்தும் விடியாமலும் அவர்களின் வங்கி கணக்கில் வந்து விழுந்த 5 ஆயிரம் ரூபாய் தான் பெரும் சர்ப்ரைஸே. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இது பெண்களை படுகுஷியில் ஆழ்த்தினாலும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

வடிகட்டிய பொய் - இபிஎஸ்
தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களை ஈர்க்கும் பிளான்தான் இந்த அட்வான்ஸ் மகளிர் உரிமைத்தொகை என அரசியல் கட்சியினர் பலர் கூறி வருகின்றனர். அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இத்தனை காலமும் இல்லாதவகையில் தற்போது விசித்திரமான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலை காரணம்காட்டி உரிமைத்தொகை நிறுத்தப்படும், அதற்கு தங்களையும் மத்திய அரசையும் குற்றம்சாட்டி இருப்பதெல்லாம் வடிகட்டிய பொய் எனவும்கூறி உள்ளார். தேர்தல் தோல்வி பயத்தால் மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே அனுப்பி மக்களிடம் நாடகம் அரங்கேற்றுவதாக குற்றம்சாட்டிய இபிஎஸ், தாங்கள் ஆட்சியில் இருந்த 2022 முதல் 2025 வரை கோடைகாலம் வரவில்லையா? 2026 ஆம் ஆண்டு கோடைகாலம் மட்டும் எப்படி கண்ணுக்கு தெரிகிறது? என்றார்.

காதில் விசிலை ஊதி...
சேலம், சீலநாயக்கன்பட்டி த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசின் 5,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையை வாங்கிக்கொண்டு காதில் விசிலை ஊதி அனுப்பிவிடுமாறும் மக்கள் பணத்தைதான் திமுகவினர் வழங்குவதாகவும் கூறினார். மேலும், வண்டி, வண்டியாக பணத்தை கொட்டி ஓட்டு போட சொல்வார்கள் என்றும் இத்தனை ஆண்டுகளாக அப்படிதானே மக்களை ஏமாற்றினார்கள் என்றும் விஜய் தெரிவித்தார்.

திமுகவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஜுரம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, திமுகவிற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஜுரம் வந்து விட்டதாகவும் அடித்து பிடித்து 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கினால் போதுமா? மீதமுள்ள ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு யார் வழங்குவார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.

ஏமாற்று வேலை
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியது ஏமாற்று வேலை என்றும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைதேர்ந்தவர் என்றும் குற்றம்சாட்டினார். மேலும், மகளிர் உரிமைத்தொகையை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் எப்போதோ நிறுத்தி இருப்போம் எனக்கூறிய அவர், கோடைகால விடுமுறை நிதி இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று சிரிக்காமல் நக்கலடித்தார்.
மொத்தத்தில் தேர்தலுக்கான அச்சாரம்தான் 5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை எனக்கூறிய நயினார் நாகேந்திரன், அந்த பணத்தின் பின்னால் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் புழங்கும் கஞ்சா விற்பனை மறைக்கப்படுகிறது, பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வன்கொடுமை மறைக்கப்படுகிறது, கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கப்படுவது மறைக்கப்படுவதாக அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

மகளிர் மகிழ்ச்சி
இப்படி எதிர்க்கட்சி தலைவர்கள் பலர், மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது குறித்து, பல விமர்சனங்களை முன்வைத்தாலும் மகளிர் என்னவோ மகிழ்ச்சியாகவே உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved