திருச்சி குலுங்கட்டும் தி.மு.க வெல்லட்டும், சிறுகனூர் மாநாடு படைக்கட்டும் வரலாறு, வரலாற்று வெற்றி படைக்க வருக உடன்பிறப்பே என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு மடல் எழுதி உள்ளார். All Roads Lead to Romeஇது தொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மாநாட்டு மடலில் கூறி இருப்பதாவது:All Roads Lead to Rome என்று சொல்வார்கள். எல்லாச் சாலைகளும் ரோமாபுரி நோக்கிச் செல்கின்றன என்பது போல, எல்லாச் சாலைகளும் இப்போது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியை நோக்கியே பயணிக்கின்றன. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உடன் நிர்வாகிகளும் இணைந்து நின்று ‘ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்‘ எனும் நிர்வாகிகளின் தேர்தல் சந்திப்பு சிறப்பு மாநாட்டிற்கான ஏற்பாடுகளை எழுச்சியோடும் ஏற்றத்தோடும் செய்து வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உறுதியுடன்... திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைத்திடும் உறுதியுடன் 2026 தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான பாசறையாக விளங்கிடும் இந்த மாநாடு, நடைபெறும் இடம் சிறுகனூர். பெருகி வரப்போகும் கருப்பு - சிவப்பு உடன்பிறப்புகளின் அலை அலையான அணிவகுப்பு, மார்ச்-9 அன்று சிறுகனூரில் பெருங்கடலாகக் காட்சியளிக்கும். 70 ஆண்டுகளுக்கு முன், ‘அன்பில் அழைக்கிறார்’ என 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டிற்குக் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்துக் கடிதம் எழுதினார் பேரறிஞர் அண்ணா. ‘தம்பி வா, தலைமையேற்க வா’ என மாநாட்டுத் தலைமைக்கு நாவலர் அவர்களை முன் மொழிந்து பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையும், அந்த மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடம், தேர்தலில் திமுக போட்டியிடலாமா, வேண்டாமா என ஜனநாயகத்துடன் வாக்கெடுப்பு நடத்தி, பெருவாரியான தொண்டர்கள், தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று வாக்களித்ததன் அடிப்படையில், தீர்மானம் நிறைவேற்றி, 1957ல் முதல் முறையாகத் தேர்தல் களம் கண்டது திமுக. அண்ணா வழியில் கலைஞர்... பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு இயக்கத்தையும் ஆட்சியையும் தன் தோள்களில் சுமந்த முத்தமிழறிஞர் கலைஞர், 1970ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் திருச்சியில் நடந்த மாநாட்டில் தான், நம் கொள்கைகளை ஒவ்வொரு தொண்டரும் ஓங்கி ஒலிக்கும் வகையில், ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார். அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதுதான் முதல் முழக்கம். திருச்சியில் 1978ஆம் ஆண்டிலும், 1986ஆம் ஆண்டிலும் இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தி ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புணர்வைக் காட்டினார். திருச்சியில் நடந்த மாநாடுகள் திருப்பு முனைகளாக அமைந்திருக்கின்றன. கடந்த தேர்தலின் போது... 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே திருச்சி, சிறுகனூரில் நடந்த தேர்தல் சிறப்பு மாநாட்டில் தான் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டேன். மக்கள் அளித்த ஆதரவால், 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அமைந்த திமுக திராவிட மாடல் ஆட்சியில், 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது. அரசியல் எதிரிகளின் சதிகளால் அதற்கு இடையூறு வந்து விடக் கூடாது என்று முன்கூட்டியே மூன்று மாத உரிமைத் தொகையையும், கோடைகால சிறப்புத் தொகையையும் வழங்கியதுடன் முதியோர் உதவித் தொகை பெறுவோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அரசின் பராமரிப்பு உதவி பெறுவோர் என ஏறத்தாழ 40 லட்சம் பேருக்கும் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு... இந்திய அரசியலில் ஈடு இணையற்ற தலைவரான கலைஞர் அவர்களை இயற்கை நம்மிடமிருந்து பிரித்த பிறகு, உங்களில் ஒருவனான என் தோள் மீது தலைமை என்ற பெரும் பொறுப்பை அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் சுமத்தினீர்கள். உங்கள் பேரன்பையும் பெரும் உழைப்பையும் நம்பி 2021ஆம் சட்டமன்றத் தேர்தல் களத்தைத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வழிநடத்தக் கூடியவனாகக் களம் கண்டேன். இப்போதும் அந்தக் கூட்டணியை வழி நடத்துபவனாக உங்களில் ஒருவனான இருக்கிறேன். மார்ச் 9ஆம் தேதி... வரும் மார்ச் 9ஆம் நாள் உடன்பிறப்புகளின் திருமுகம் கண்டு நான் மகிழும் வாய்ப்பு அமையவிருக்கின்ற இதே திருச்சி, சிறுகனூரில்தான் 5 ஆண்டுகளுக்கு முன் 2021 மார்ச் 7ஆம் நாள் உங்களின் திருமுகம் கண்டேன். அத்துடன், 7 அம்ச திட்டங்களையும் வெளியிட்டேன். பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூகநீதி ஆகிய 7 அம்சங்களை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை சிறுகனூரில் வெளியிட்டேன். பெருமை கொண்டேன்... 2026ல் தொடரப்போகும் திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வையிலான திட்டங்களை முன்வைத்து ‘தமிழ்நாடு 2030‘ என்கிற 14 முக்கிய அம்சங்களை, மார்ச் 6ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற ‘கனவு மெய்ப்படும்’ நிகழ்வில் வெளிப்படுத்தினேன். ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சத்தை எதிர்கொண்டபடி எப்படியெல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம், அதனால் தமிழ்நாடும் தமிழ் மக்களும் அடைந்துள்ள பயன்கள் என்ன என்பதை அமைச்சர்கள் எடுத்துரைத்த விதம் கண்டு, முதலமைச்சராக மட்டுமல்ல, உங்களைப் போன்ற உடன்பிறப்பாகப் பெருமை கொண்டேன். உலக நாடுகளுடன் போட்டி திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள், ’தமிழ்நாட்டைப் பாருங்கள்’ என்று பிற மாநிலங்களுக்கு வழி காட்டியிருக்கிறது. அடுத்த 5 ஆண்டு காலம் தொடரப்போகும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதுடன், சர்வதேசத் தரத்துடன் உலக நாடுகளுடன் போட்டி போடக்கூடிய அளவுக்கான வளர்ச்சியை நிச்சயம் பெற்றிருக்கும். உடன்பிறப்புகளில் ஒருவன் என்ற உணர்வுடன் இந்த இயக்கத்திற்காக உழைக்கிறேன். என்னைப் போலவே உழைக்கும் பேராற்றல் பெற்றவர்கள் தான் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள். உங்களைக் காணும்போது என் உழைப்பின் ஆற்றல் மேலும் பெருகும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே, திருச்சி குலுங்கட்டும், தி.மு.க வெல்லட்டும், சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல் அழைப்பு விடுத்துள்ளார். Related Link ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க 30 நாள் அனுமதி