Also Watch
Read this
Posted on: Feb 09, 2026 09:07 AM
By: Manigandan Raja
சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு, உலக அரங்கில் தாங்கள் ஒரு பயங்கரமான கிரிக்கெட் அணியாக மாறியுள்ளதாக இந்திய அணி பெற்றிருந்த மனப்பான்மையை, அமெரிக்க கிரிக்கெட் அணி உடைத்துள்ளது. அமெரிக்க அணியில் இடம்பெற்றிருந்த இந்தியர்களே இதற்கு காரணமாகவும் உள்ளனர். இதுகுறித்த செய்தித் தொகுப்பினை தற்போது பார்க்கலாம்.
ரன்களை குவித்த இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக செயல்பட்டு, தொடர்ச்சியாக 200க்கும் மேல் ரன்களை குவித்த இந்திய அணி, இறுதியில் 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றிருந்தது.
இந்திய அணி பேட்டர்கள் சொதப்பல்
இப்படி, இரு தரப்பு தொடரில் அதிரடி காட்டிய இந்திய டி20 அணி, டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், கத்துக்குட்டி அணிகளான அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பெரிய ஸ்கோர்களை அடிக்கும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், முதல் லீக் போட்டியில், யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்திய அணி பேட்டர்கள் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பினர்.
20 ஓவர், 9 விக்கெட்டு, இந்திய அணி 161/9 ரன்கள்
அமெரிக்க அணிக்கு எதிராக, பவர் பிளேவிலேயே 4 விக்கெட்களை இழந்து விட்டனர். ஒரு கட்டத்தில் 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இப்போட்டியில் இந்திய அணி தோற்றுவிடும் என்று ரசிகர்கள் அதிருப்தியடைய தொடங்கியபோது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதானமாக ஆடி, இந்திய அணி ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 161 ரன்கள் சேர்த்த நிலையில், இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி, 20 ஓவர்களுக்கு 132 ரன்களே எடுத்தது.
அமெரிக்காவை வழிநடத்திய கேப்டனும் இந்தியர்
ஒரு வழியாக இந்திய அணி அமெரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றாலும், இந்திய வீரர்களை திணறடித்ததே, அமெரிக்க அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற 5 இந்தியர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். குறிப்பாக அமெரிக்காவை வழிநடத்திய கேப்டனும் இந்தியர் என்பது தான் கூடுதல் பெருமையாக உள்ளது.
ரஞ்சி டிராபியில் விளையாடிய அனுபவம்
அமெரிக்க அணியை வழிநடத்திய கேப்டன் மோனாங்க் படேல் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் அமெரிக்க அணியின் கேப்டனாக இருந்து இந்திய பந்து வீச்சாளர்களின் வியூகங்களை முறியடித்தார். பும்ரா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் குஜராத் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு.
டெல்லியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் மிலிந்த் குமார்
அடுத்ததாக, டெல்லியை சேர்ந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் மிலிந்த் குமார், டெல்லி ரஞ்சி அணியின் நட்சத்திரமாக விளங்கியவர். விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருடன் இணைந்து விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த ஹர்மீத் சிங்
அடுத்ததாக, மும்பையைச் சேர்ந்த ஹர்மீத் சிங், ஐசிசி யு19 கிரிக்கெட் உலகக் கோப்பையில் 2012 இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இந்திய அணி அந்த உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர்.
மும்பையை சேர்ந்த சௌரப் நேத்ரவல்கர்
மற்றொரு வீரரான மும்பையைச் சேர்ந்த சௌரப் நேத்ரவல்கர், 2010ம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோருடன் இணைந்து விளையாடியவர். இவரது துல்லியமான பந்துவீச்சால், இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.
புனேவை சேர்ந்த ஷுபம் ரஞ்சனே
அடுத்ததாக, அமெரிக்க அணியில் ஆல்-ரவுண்டராக உள்ள புனேவை சேர்ந்த ஷுபம் ரஞ்சனே, 2016, 2017 ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக தனது முதல் தர அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். இந்த 5 வீரர்களும் இந்திய கிரிக்கெட்டின் நுணுக்கங்களை இந்தியாவிலேயே கற்றுக்கொண்டவர்கள். மைதானத்தில் எதிரெதிர் முனையில் நின்றாலும், இவர்களது திறமை இந்திய கிரிக்கெட் கட்டமைப்பின் வலிமையையே உலகிற்கு பறைசாற்றுகிறது என்பதுதான் உண்மை.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் அஜய்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved