Also Watch
Read this
Posted on: Mar 28, 2026 07:34 AM
கடந்த 25 நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்ய முடியாமல், திமுக தவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார். ஆலந்தூரில் பேசிய அவர், ஒரே நாளில் தலைவர்களை வரவழைத்து தொகுதிகளை இறுதி செய்த ஒரே இயக்கம் அதிமுக தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரம் தீவிரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் Alandur Assembly constituency உள்ள நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலையில் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இபிஎஸ் பேசியதாவது;
ஆலந்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து உள்ளேன். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற உங்களின் ஆதரவு தேவை. 25 நாட்களாக திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இன்னும் இழிபறி தான் நீடிக்கிறது. நாங்கள் நான்கு நாட்களில் பேச்சு வார்த்தையை முடித்துவிட்டோம்.

பயம் வந்து விட்டது
நான் மயிலாப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோதே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதிக இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அழுது கொண்டே சிரிப்பதாக கூறுகிறார்கள். இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என முடிவு செய்யவில்லை. பத்து ஆண்டுகாலம் துணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை திமுக வழங்கி உள்ளது. ஆனால், இப்போது சேர்ந்த கட்சிக்கு அதிக தொகுதிகளை கொடுத்து உள்ளது.

கவனம் செலுத்தவில்லை
திமுக தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை. பத்து தோல்வி பழனிசாமி என விமர்சிக்கும் ஸ்டாலின், 2011க்கு பிறகு 2021 வரை நீங்கள் வெற்றி பெற முடியவில்லை. 2011ல் எதிர்க்கட்சியாக கூட உங்களால் வர முடியவில்லை. திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில், மக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் அனைத்தும் விலை ஏற்றம் மட்டுமே அடைந்துள்ளன. ஜெயலலிதா இறந்த பிறகு அதிக பிரச்சினைகளை எதிர்கொண்டோம். எங்கள் கட்சிக்குள் இருந்த விஷமிகள் யார்? என்பது குறித்து இப்போது அடையாளம் கண்டுள்ளோம். சிறந்த ஆட்சியை அதிமுகதான் தமிழகத்தில் கொடுத்துள்ளது. நல்ல அரசு என்ற பெயரை மக்கள் கொடுத்துள்ளனர்,

ஐந்து லட்சம் கோடி கடன்
இந்த ஐந்தாண்டு காலத்தில், 5 லட்சம் கோடி ரூபாயை திமுக அரசு கடன் பெற்று உள்ளது. கடன் வாங்குவதில் முதன்மையான, முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார். அனைத்திலும் திமுக ஊழலில் ஈடுபட்டுள்ளது. குடிநீர் வழங்கல் தொடங்கி பல்வேறு துறைகளில் அவர்கள் ஊழல் செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் இவை அனைத்தும் தோண்டி எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. மக்கள், சிறுமிகள், மூதாட்டிகள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வளவு கேவலமான ஆட்சி தமிழகத்தில் தற்போது நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved