Also Watch
Read this
Posted on: Jan 20, 2026 06:14 AM
By: Manigandan Raja
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக் கொண்டிருந்தபோது பலமுறை மைக் ஆஃப் செய்யப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெளிநடப்பு செய்தது ஏன்? என 13 காரணங்களை பட்டியலிட்டு, ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை
ஆளுநர் பேசும் போது, அவரது மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டதால், பேச அனுமதிக்கப்படவில்லை. உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. மக்களை பாதிக்கும் பல முக்கிய பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது. பல முதலீட்டாளர்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்திலேயே உள்ளன. உண்மையான முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது.
முதலீட்டு தரவு, தமிழக முதலீட்டாளர்களுக்கு ஈர்ப்பு குறைந்த மாநிலமாக மாறி வருவதை காட்டுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு நேரடி முதலீடு பெறும் மாநிலங்களில் தமிழகம், 4ஆவது இடத்தில் இருந்தது. இன்று 6ஆவது இடத்தைப் பிடிக்க போராடி வருகிறது
பெண்கள் பாதுகாப்பு, உரையில் இல்லை
பெண்களின் பாதுகாப்பு குறித்து, உரையில் எந்த குறிப்பீடும் இல்லை. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான பாலியல் வன்முறை வழக்குகள் 55%க்கும் மேல் அதிகரித்துள்ளன. பெண்களைத் தொந்தரவு செய்வது 33%க்கும் மேல் உயர்ந்துள்ளது. தலித் மக்களுக்கு எதிரான அத்துமீறல் மற்றும் தலித் பெண்கள்மீது பாலியல் வன்முறைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
போதைப்பொருள் பரவல்
போதைப் பொருட்கள் பரவலும், பள்ளி மாணவர்கள், இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தின் அதிகரிப்பும் மிகக் கடும் பிரச்னையாக உள்ளது. ஒரு ஆண்டில் மட்டும் போதைப் பழக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். இது நமது எதிர்காலத்தையே பாதிக்கிறது. ஆனால், இது அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கவலை தரும் கல்வி நிலை
கல்வித் தரநிலைகள் தொடர்ந்து சரிவடைந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் பரவலான நிர்வாகக் குறைபாடு, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றன. 50%க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. தற்காலிக ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார்கள். இதுவும், ஆளுநர் உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
செயல் இழந்த கிராம பஞ்சாயத்துகள்
பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில், பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததால் அவை செயலிழந்த நிலையில் உள்ளன. மேலும், அரசு நியமித்த சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடிக்கணக்கான மக்கள், அடிப்படை ஜனநாயக உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்படுகின்றனர். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கிராம பஞ்சாயத்து மீண்டும் செயல்பட மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், ஆளுநர் உரையில் இதுகுறித்து ஒரு சொல்லும் இல்லை.
பக்தர்களின் உணர்வுகள் புறக்கணிப்பு
தமிழகத்தில், பல ஆயிரம் கோயில்களில் நிர்வாக வாரியங்கள் அமைக்கப்படாமல், அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. கோடிக்கணக்கான பக்தர்கள் கோயில்களின் தவறான நிர்வாகத்தால் மனவேதனையிலும் அதிருப்தியிலும் உள்ளனர். பழமையான கோயில்களை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கான மதுரை உயர் நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் 5 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தொழில்துறை புறக்கணிப்பு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், மறைமுக செலவுகளால் கடும் இழப்பீட்டை சந்திக்கின்றன. வேலைவாய்ப்புக்கும் வளர்ச்சிக்கும் இவை மிக முக்கியமானவை. நாட்டில் 5.5 கோடிக்கு மேற்பட்ட MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் மட்டுமே உள்ளது.
வளர்ச்சி வாய்ப்பு இருந்தும், தமிழக தொழில் முனைவோர் பிற மாநிலங்களில் தொழில்களை தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த பிரச்சினையும், ஆளுநர் உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது
கீழ்மட்ட ஊழியர்களிடையே அனைத்து துறைகளிலும் பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் கலக்கம் மற்றும் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து எந்த குறிப்பீடும் இல்லை. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட அடிப்படை கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved