Also Watch
Read this
By: Web Team

முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இது ஒரு கருப்பு நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கருப்பு நாள் மற்றும் கருப்பு மசோதா.
இந்த மசோதாவின் மூலம், ஒருவரை 30 நாட்கள் கைது செய்தாலே, தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை நீக்க முடியும். எந்த விசாரணையும், தண்டனையும் தேவையில்லை. இது பாஜகவின் கட்டளைப்படி நடக்கும் செயல்.
இந்த மசோதா ஜனநாயகத்தின் அடிப்படையையே தாக்குகிறது. எனவே, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இதை எதிர்க்க வேண்டும். இந்த மசோதாவின் மூலம் இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற முயற்சி நடக்கிறது.
வாக்குத் திருட்டு அம்பலமான பிறகு, மத்திய பாஜக அரசு அமைக்கப்பட்டதே கேள்விக்குறியாக உள்ளது. மோசடி மூலம் மக்களின் வாக்குகளை திருடி ஆட்சிக்கு வந்த பாஜக இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறது. அதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த மசோதாவின் திட்டம் தெளிவானது. மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் எதிரிகள் மீது பாஜக பொய் வழக்குகளை பதிவு செய்து, அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும். 30 நாள் கைது கூட ஒரு தலைவரை நீக்க போதுமான காரணம் என்று காட்டப்படும்.
எந்த விசாரணையும், தண்டனையும் இல்லாமல் இது நடக்கும். இந்த அரசியலமைப்புக்கு எதிரான திருத்தம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். ஏனென்றால், குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே தண்டனை வழங்க முடியும். வழக்கு பதிவு செய்த உடனேயே தண்டனை வழங்க முடியாது
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மாநிலக் கட்சிகளை மிரட்டுவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா அரசியல் பழி வாங்கலுக்காகவும், மாநில அரசுகளை கட்டுப்படுத்தவும் கொண்டு வரப்படுகிறது.
இது மாநில சுயாட்சிக்கு எதிரானது, கூட்டாட்சி தத்துவத்தை மீறுவது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மாநில உரிமைகள் பறிக்கப்படும்.
ஆகவே, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved