புஷ்பா 2 திரைப்படம்புஷ்பா 2 திரைப்படம் அல்லு அர்ஜூனுக்கு எந்த அளவுக்கு பேரையும் பெருமையையும் தேடி கொடுத்ததோ, அதை விட பல மடங்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்... ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்க்க குடும்பத்தோடு சென்ற பெண் ரேவதி, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8வயது மகன் சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்... இந்த விவகாரம் பெரும் பூகம்பமாக வெடித்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய போதும், ஒரு நாள் இரவை சிறையில் கழித்த பின்னரே வெளியே வந்தார் ஃபயர் ஸ்டார் அல்லு அர்ஜூன்....ஆனால் இந்த விவகாரம் அதோடு அடங்கவில்லை... அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் வார்த்தை போரே நடந்தது. இதனிடையே திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த பின்னரும் காரின் மேற்கூரையை திறந்து ரோடு ஷோ நடத்துபவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்? என சரமாரியாக விளாசினார். மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சினிமா பிரபலங்கள் யாரும் மருத்துவமனையில் உள்ள சிறுவனை எட்டிக் கூட பார்க்கவில்லை என அவர் கொதித்தெழ, அதற்கு அல்லு அர்ஜூன் விளக்கம் கொடுக்க, இந்த விவகாரம் திரையுலகை தாண்டி அரசியல் களத்திலும் தீப்பிடிக்க தொடங்கியது.இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் தான் ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜூனின் ஜூப்ளி இல்லத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. வீட்டின் மதில் சுவர் மீது ஏறி நின்றுக்கொண்டு வீட்டில் இருந்தவர்களை நோக்கி கற்கள் மற்றும் தக்காளிகளை வீசி அவர்கள் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.தொடர்ந்து சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், அங்கிருந்த பூந்தொட்டி மற்றும் கண்ணில் பட்டவை அனைத்தையும் தூக்கி போட்டு உடைத்து நாசப்படுத்தினர்...நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திடம் அல்லு அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதோடு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கத்தி கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரத்தில் அந்த இடமே போர்க்களமாக மாறியது...உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் தரையில் படுத்துக்கொண்டு வர மறுத்ததால், அவர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்.... முதற்கட்ட விசாரணையில், போராட்டம் நடத்தியவர்கள் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தியதாக அவர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தெலங்கானா போலீஸ் கைது செய்தது...இதனிடையே அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தவறு செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க மாநில டிஜிபி மற்றும் காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.https://www.youtube.com/embed/zdOYAqracbU