Also Watch
Read this
Posted on: Jan 21, 2026 06:58 AM
By: Manigandan Raja
சென்னையில், இன்று காலை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.
காலையிலேயே அதிர்ச்சி தகவல்
தங்கம் விலை இன்று ஜனவரி 21ஆம் தேதி, காலையிலேயே ஏற்றம் கண்டு, அதிர்ச்சி தந்துள்ளது. இதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்தை தாண்டி உள்ளது. வெள்ளி விலை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை ஆனது.
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கத்தின் விலை குறைந்தாலும் மீண்டும உயர்வை தான் கண்டு வருகிறது.
சென்னையில், இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,14,000 ஆக இருந்தது.
தங்கத்தின் தேவை அதிகரிப்பு
உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளது என்று நிதி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தை நிலவரம், தங்கத்தின் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய பங்குச்சந்தை பல்வேறு சறுக்கல்களை சந்தித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை நிலவரம்
இந்நிலையில், நேற்று 20ஆம் தேதி, பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவின்போது சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள், அதாவது 1.28% சரிந்து 82,180.47 ஆகவும், நிஃப்டி 353 புள்ளிகள் குறைந்து 25,232.50 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 82,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,203 புள்ளிகளாகவும் சரிந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை பதிவு செய்தது. இதன் தாக்கமும் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளதாக, வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved