Also Watch
Read this
Posted on: Mar 13, 2026 08:41 AM
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பாணியில், தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் இணைந்தார் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் இணைந்துள்ள கட்சியின் பெயர், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் அறிவித்தார்.
ஜெயலலிதாவின் தோழி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தான் தொடங்கிய கட்சியின் பெயரை இன்று, மார்ச் 13ஆம் தேதி, அறிவித்தார். தனது கட்சிக்கு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டிருப்பதாக, சென்னை போயஸ் கார்டனில், செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா, புதிய கட்சியைத் தொடங்குவதாக, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் பிப்ரவரி 24ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்தார். தொண்டர் ஒருவர் தொடங்கியது தான் இந்த கட்சி என்றும், அதில் தன்னை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் சசிகலா கூறினார்.
தமிழகம், புதுவையில் போட்டி
சென்னை, போயஸ் தோட்டத்தில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பின் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்றார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் பெயரில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிடுவோம் என்றும் சசிகலா அறிவித்தார்.
தனி மரமல்ல, தோப்பு
இதுதொடர்பாக, சசிகலா கூறியதாவது:
தென்னந்தோப்பு தான், அபுமமுக கட்சியின் சின்னம். இதன் மூலம் தனி மரமாக வரவில்லை, தோப்பாகத் தான் வந்துள்ளேன், நான் என்றைக்குமே மக்களுடன் தான் இருப்பேன் என்பதற்கே இந்த சின்னம் சாட்சி. ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளுடன், கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவேன். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? இல்லையா? என்பது தேர்தல் முடிவு வந்த பிறகு தெரிந்து விடும்.
இவ்வாறு சசிகலா தெரிவித்தார்.
ஜெயலலிதா பெயர் இல்லை
சசிகலாவின் கட்சியில், ஜெயலலிதா பெயர் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புரட்சித் தலைவர் பெயர் இடம் பெற்று உள்ளது.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில், பரபரப்பைக் ஏற்படுத்திய சசிகலா அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியில் இணைந்து உள்ளார். ராமநாதபுரம் மாநாட்டில், கருப்பு, வெள்ளை, சிவப்பு என மூன்று நிறங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கொடியின், நடுவில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றிருந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved