வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெய்-ஐ வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை பார்க்கலாம்...செய்தித்தாள்கள், செய்தி படிப்பதற்கு என்ற நிலையைக் கடந்து பல பயன்பாடுகளுக்கு உபயோகமாகிறது என்பது மகிழ்ச்சியான விஷயமே, ஆனால், அதிலும் சிலவகை பயன்பாடுகளில் ஆபத்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். சிறிய ஹோட்டல், தெருவோர உணவகங்களில் சாப்பிட்டு கைகழுவிய பின் ஈரமான கைகளை துடைப்பதற்கு, பழைய செய்தித்தாள்களை கத்தரித்து வைத்திருப்பார்கள், அவற்றில் நம் கையை துடைக்கும் போது நமது உடலுக்குள் காரீயம் சென்று விடுகிறது.. செய்தி தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. அது, தாளில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, தண்ணீர் பட்டால் பிரச்சனை தான். வடை, பஜ்ஜி போன்று எண்ணெய் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வெளியேற்ற செய்தித்தாளை பயன்படுத்துகிறார்கள். இது, அதைவிட மிகப்பெரிய ஆபத்து, காரீயம் நேரடியாக உணவு குழாய்க்குள் சென்று விடும்.. காரீயம் உடலுக்குள் சென்றால் அது சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தசை வளர்ச்சி என்று எல்லாவற்றையும் பாதிக்கும். இப்படி கெடுதல் விளைவிக்கும் சில பொருட்கள் உடலுக்குள் காலப்போக்கில் அது கழிவாக வெளியே வந்துவிடும். ஆனால் காரீயத்தின் கதை வேறு. அது கழிவாக வெளியே செல்வதில்லை. தொடர்ந்து காரீயம் உள்ளே போகப்போக சேர்ந்து கொண்டே போகும், கெடுதல் கூடிக் கொண்டே போகும்... எனவே, செய்தித்தாள்களை கை கழுவுவதற்கோ, எண்ணெய்யை நீக்குவதற்கோ பயன்படுத்துவதை தவிர்ப்பது அவசியம்.