Also Watch
Read this
Posted on: Feb 07, 2026 07:18 AM
By: Manigandan Raja
மதுரையில், பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்ததாக கூறப்பட்ட சூழலில், மனைவியின் தகாத உறவால் நிகழ்ந்த திட்டமிட்ட படுகொலை என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்த 33 வயதான செந்தில்குமார் என்பவர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பிரமுகர் செந்தில்குமார்
படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமாருக்கு காவ்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவரான செந்தில்குமார், மதுரை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் ஒன்றிய தலைவராகவும் பதவி வகித்து வந்தார். மேலும், சாமநத்தம் கிராமத்தில் நெடுங்குளம் சாலையில் தேநீர் கடை வைத்து நடத்தி வந்தார் செந்தில்குமார்.
மது அருந்தியவர்கள் கொடூரம்
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல, காலை 6 மணியளவில் தேநீர் கடையை திறக்கச் சென்றபோது, சிலர் மதுஅருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் கடை முன்பு மது அருந்த வேண்டாம் என செந்தில்குமார் கண்டித்ததை தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், செந்தில்குமாரை கொடூரமாக வெட்டி, தலையைத் துண்டித்து படுகொலை செய்துவிட்டு தப்பியதாகவும் தகவல் வெளியானது.
இபிஎஸ் கடும் கண்டனம்
இச்சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தை பதிவு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லை என்றும் சாடியிருந்தார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த படுகொலை சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில், செந்தில்குமாரின் மனைவியின் ஆண் நண்பரான கார்த்திக் என்ற குட்டி பிச்சை உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறிய காவ்யா
மதுரை, அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக், பள்ளியில் படித்த காலத்தில் இருந்து காவ்யாவை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களது காதல் நிறைவேறாத நிலையில், காவ்யாவுக்கு செந்தில்குமாரை மணமுடித்து வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். திருமணத்திற்கு பிறகும், காதலன் கார்த்திக் உடன் காவ்யா தொடர்பில் இருந்து வந்ததை அவரது பெற்றோரும், கணவர் செந்தில்குமாரும் கண்டித்துள்ளார். இதையடுத்து, செந்தில்குமார்- காவ்யா தம்பதிக்கு இரு குழந்தைகள் பிறந்து, சாமநத்தம் கிராமத்தில் வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இருப்பினும், காதலன் கார்த்திக் மீது கொண்ட மோகத்தால், காவ்யா அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறி கார்த்திக் உடன் சென்று விடுவது தொடர்கதையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
செல்போனில் பேச்சு, கண்டிப்பு
குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து, காவ்யாவின் தவறை மன்னித்து, அவருடன் செந்தில்குமார் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதலன் கார்த்திக் உடன் செல்போனில் காவ்யா பேசியதை அறிந்த செந்தில்குமார் அவருடன் சண்டையிட்டுள்ளார். இதனால், கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்ற காவ்யாவை அவரது பெற்றோரும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
காவ்யாவிடம் தொடர்ந்து விசாரணை
இதையடுத்து, கணவர் செந்தில்குமார் தம்மை தாக்கியது குறித்து காதலன் கார்த்திக்கிடம் ஒப்பாரி வைத்த காவ்யா, தம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை என சொல்லி புலம்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, செந்தில்குமாரை வெட்டி படுகொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வரும் போலீசார், காவ்யாவிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved