கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு : கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மிகவும் பழமையானது. இந்த கோயிலில் மிகவும் பழமையான ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் சிலை உள்ளது இது பாதாள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் அத்திவரதர், 1915 ஆம் ஆண்டு காட்சி கொடுத்த பின்பு பாதாள அறையில் வைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு காரணங்களால் 98 ஆண்டு காலம் வெளியே எடுக்காமல் இருந்த நிலையில், கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிய எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு 3 நாட்கள் காட்சி கொடுத்த பிறகு. மீண்டும் பாதாள அறையில் வைக்கப்பட்ட அத்திவரதர், தற்போது மீண்டும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இவரை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் கடந்த மார்ச் 01 ம் தேதி ஞாயிறு முதல் தொடர்ந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திவரதர் காட்சி கொடுத்தார். ஆனால் இங்குள்ள அத்திவரதர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் அருள் பாலிப்பதால் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம் என கூறப்படுகிறது. அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு பகுதியில் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கோடை காலம் என்பதால் நீண்ட வரிசையில் செல்லும் போது பக்தர்கள் வசதிக்காக நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார். இன்று ஒரு நாளில் மட்டும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Related Link தனியார் விடுதி கழிவுநீர் கால்வாயில் விழுந்த வடமாநில சிறுவன்