Also Watch
Read this
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும், தாம் முதலமைச்சராக இருக்கும் போது செங்கோட்டையன் போட்ட ஆட்டத்தின் ஆதாரங்களை வெளியிட்டால் அவரால் வெளியில் தலைகாட்டமுடியாது என்றும் இபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது வெளியில் நடமாட முடியாது
தவெகவில் முக்கிய பதவியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் இபிஎஸ், தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் அவரால் பொதுவெளியில் நடமாட முடியாது என பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. அதிமுகவில் மூத்த நிர்வாகியாக இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைந்தது முதல் இபிஎஸ்சை கடுமையாக சாடி வருகிறார். அண்மையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கூட, ஜெயலலிதா மறைவுக்கு பின் நடந்தவை பற்றி பேசும் போது எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், கோபிசெட்டிப்பாளையம் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை ஒருமையில் பேசி காட்டமாக விமர்சித்தார். சுயநலம் கொண்டவர், அகங்காரம் மிக்கவர் என்றதோடு, செங்கோட்டையன் போன்றவர்கள் நாட்டுக்குத் தேவையா? என்றும் வினவினார்.

மனைவியும் மகனும்
தன்னை விட யாரும் கட்சியில் முன்னேறிவிடக்கூடாது என்பதில் செங்கோட்டையன் குறியாக இருந்ததாலும், அவரால் தான் ஈரோட்டில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகிச் சென்றதாகவும் இபிஎஸ் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா ஆட்சியின் போது செங்கோட்டையனின் மகனும், மனைவியும் நேரில் வந்து அவரை பற்றி ஒரு புகாரளித்ததாகவும், புகார் கொடுத்துவிட்டு தலைமைச் செயலகத்தின் படியிலிருந்து இறங்குவதற்குள் அவரது பதவி பறிக்கப்பட்டதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டார். மேலும், அது என்ன புகார் என்று தாம் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆதாரங்கள் இருக்கிறது
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என்னிடம் கெஞ்சி கதறி அழுது அமைச்சர் பதவியை பெற்றதாக சொன்ன எடப்பாடி பழனிசாமி, இப்படிப்பட்ட நபரை அமைச்சரவையில் சேர்த்ததுதான் தாம் செய்த பெரும் தவறு என வருத்தப்பட்டார். அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதா புகைப்படம் இல்லை எனக்கூறி புறக்கணித்த செங்கோட்டையன், கலைஞர் படம் போட்ட சைக்கிளை வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். தாம் முதலமைச்சராக இருக்கும்போதே செங்கோட்டையன் போட்ட ஆட்டம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வைத்திருப்பதாகவும், திமுகவின் பி டீமாக மாறத்தொடங்கியதுமே ஆதாரங்களை தூசி தட்டி எடுத்து விட்டதாகவும் கூறினார்.

தலை காட்ட முடியாது
மேலும், தாம் வகிக்கும் பதவிக்காகவே மரியாதையாக பேசுகிறேன் என சீறிய இபிஎஸ், பச்சையாக பேசி விமர்சிக்க தொடங்கிவிட்டால் செங்கோட்டையனால் நடமாட முடியாது என்றும் ஆவேசமாக கூறினார். ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு கல்லூரி கட்டும் அளவுக்கு சொத்து சேர்ந்தது எப்படி? என்ற இபிஎஸ், வயதுக்கு தகுந்த பேச்சு இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.

அதோடு, செங்கோட்டையன் தொடர்பான வீடியோக்கள் தம்மிடம் உள்ளதாகவும் அதை டிவியில் ஒளிபரப்பினால் கோபிசெட்டிப்பாளைய வீதியில் செங்கோட்டையனால் தலைகாட்ட முடியாது எனவும் இபிஎஸ் ஆவேசமடைந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved