Also Watch
Read this
Posted on: Jan 30, 2026 06:27 AM
By: Manigandan Raja
சென்னையில், அரசு கலைக்கல்லூரியில் உள்ள கேண்டீனில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கேண்டீன் உரிமையாளர், டீ மாஸ்டர் உள்பட மூவரை கைது செய்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், கணவனை பிரிந்து வேலைக்கு சென்ற பெண்ணை 3 காமுகன்கள் சேர்ந்து தங்களது ஆசைக்கு பயன்படுத்தி கொண்டதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேண்டீனில் புதிதாக வேலைக்கு சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட, சூதுவாது தெரியாத பெண்ணை, ஈவு இரக்கமே இன்றி மூன்று காமுகன்கள் சேர்ந்து அவ்வப்போது தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
கல்லூரி வளாகத்துக்குள் வைத்து...
சென்னையில் செயல்படும் அரசு கலைக்கல்லூரி ஒன்றில் கோட்டூரை சேர்ந்த முத்து செல்வம் என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக கேண்டீனை நடத்தி வருகிறார். இங்கு வெளி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட, அதே கேண்டீல் டீ மாஸ்டராக பணிபுரியும் புதுக்கோட்டையை சேர்ந்த 57 வயதான குணசேகரன், அப்பெண்ணை கல்லூரி வளாகத்துக்குள் வைத்து தனது பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டார்.
விசாரணையில் அதிர்ச்சி
அப்போது, அப்பெண் கத்தி கூச்சலிட்டதை கேட்டு விரைந்த சிலர், அப்பெண்ணை அக்கயவனிடமிருந்து மீட்டதுடன், அவனை அடித்து உதைத்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், பெண்கள் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் முன்பு ஒப்படைக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, டீ மாஸ்டர் மட்டுமின்றி கேண்டீன் உரிமையாளர் முத்துசெல்வமும், அவரது நண்பர் கார்த்திகேயனும் அவ்வப்போது தங்களது பாலியல் இச்சைக்காக அப்பெண்ணை வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
கொடுமையை தாங்க முடியாமல்...
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணை, கேண்டீன் உரிமையாளர் முத்துசெல்வம், கும்பகோணத்தில் தமக்கு தெரிந்தவர் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, கேண்டீனில் பணியமர்த்தி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதையும், திருமணமான இரண்டே மாதங்களில் கணவனை பிரிந்து தனியாக இருப்பதையும் அறிந்து கொண்ட கேண்டீன் உரிமையாளர் முத்துசெல்வம், அவ்வப்போது அப்பாவி பெண்ணை ஆசை வார்த்தை பேசி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரை தொடர்ந்து கேண்டீனில் பணிபுரிந்து வந்த கார்த்திகேயனும் கூட்டு சேர்ந்து, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கல்லூரி கேண்டீன், கல்லூரி வளாகத்திலுள்ள அறை ஆகிய இடங்களில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை கவனித்த டீ மாஸ்டர் குணசேகரனும் அதே வழியில் சென்று, கல்லூரி வளாகத்திலேயே வைத்து அப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அப்போது, கொடுமையை தாங்க முடியாமல் பெண் கத்தி கூச்சலிட்டதால் வசமாக சிக்கிக்கொண்டார்.
கேண்டீன் உரிமையாளர், டீ மாஸ்டர், ஊழியர் கார்த்திகேயன் கைது
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேண்டீன் உரிமையாளர் முத்து செல்வம், டீ மாஸ்டர் குணசேகரன், ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அப்பெண்ணிடம் வேறு எவரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார்களா எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கை போலவே கல்லூரி வளாகத்திலேயே வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர வைக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved