Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 08:57 AM
By: Manigandan Raja
தேமுதிகவில் விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் ஆர்வம் காட்டாததால், சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதைக் கண்டு தேமுதிக தலைமை கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தேமுதிக தலைமை அலுவலகம்
ஒரு காலத்தில் எப்படி இருந்த கட்சி அலுவலகம் இப்படி மாறி விட்டதே என்று சொல்லும் அளவுக்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுவது பரிதாப காட்சிதான்
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு விநியோகம் உள்ளிட்ட பணிகளில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக போன்ற முக்கிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. நாம் தமிழர் கட்சியோ இன்னும் ஒரு படி மேலே போய் வேட்பாளர்களையே அறிவிக்க தொடங்கி விட்டது. அவ்வளவு ஏன்? புதிதாக கட்சி தொடங்கிய தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காற்று வாங்கும் கட்சியின் தலைமை அலுவலகம்
இந்த சூழலில்தான், தங்களை 3ஆவது பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் தேமுதிக, கடந்த 6ஆம் தேதி விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது. ஆனால், முதல் நாள் மட்டும் ஏதோ பெயரளவுக்கு நிர்வாகிகள் வந்து விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். அதன் பிறகு, விருப்ப மனு விநியோகம் செய்வதற்கு மட்டுமே நிர்வாகிகள் காத்திருக்கிறார்களே தவிர, வாங்குவதற்கு ஆள் இல்லாமல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் காற்று வாங்கி வருகிறது.
யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்காததால் நிர்வாகிகள் தயக்கம்?
இதுகுறித்து கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை. கடந்த ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்காத பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் அறிவிக்கவில்லை. அதன் பிறகு, இதோ அதோ என போக்குக்காட்டி வருகிறாரே தவிர, யாருடன் கூட்டணி என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
கடும் அதிர்ச்சியில் கட்சித் தலைமை
அதேபோல, தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், 10 சீட்டுக்கு மேல் கிடைக்காது என்பது கட்சி நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளது. இதிலும், எந்தெந்த தொகுதி கிடைக்கும் என்பதும் உறுதியாக தெரியாது. அப்படி இருக்க, நாம் ஒரு தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய, அந்த தொகுதி கிடைக்காமல் போய் விட்டால் கட்டிய பணம் போச்சே, என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களே, விருப்ப மனு வாங்க நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி 4 நாட்களாகியும் வெறும் 150 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படவே, கட்சித் தலைமையோ கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் சுப்புராமன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved