Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 06:40 AM
By: Manigandan Raja
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், களத்தில் எதிர் எதிர் துருவமாக இருக்க வேண்டிய புதுக்கோட்டை அதிமுகவும், திமுகவும் ஒட்டி உறவாடி UNDER DEALINGல் அநியாயத்திற்கு சமரசமாக போவது, இரு கட்சிகளின் தலைமையை சூடாக்கி பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன; இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... எனக் கூறுவது போல, அமைச்சர் ரகுபதியும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் இணக்கம் காட்டி வருவது, இரு கட்சிகள் இடையேயான களப் போட்டியின் சுவாரசியத்தை குறைத்திருக்கிறது.
திமுக, அதிமுகவின் நெருக்கம்
தேர்தல் நெருங்குகிறது என்றாலே, அதிமுகவும், திமுகவும் களத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை 50 ஆண்டுகளாக பார்த்து வந்த மக்களுக்கு, புதுக்கோட்டை திமுக, அதிமுகவின் நெருக்கம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
ஏகப்பட்ட புகார்களில் சிக்கியவர்
புதுக்கோட்டை அதிமுக என்றாலே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான். முகம் தெரிந்த சில நிர்வாகிகள் அதிமுகவில் இருந்தாலுமே, விஜயபாஸ்கர் இல்லாமல் அணு அளவும் அசையாது தான். ஒட்டு மொத்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜயபாஸ்கர், குட்கா முறைகேடு வழக்கு, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, விதிகளை மீறி தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தது, கொரோனா உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு என ஏகப்பட்ட புகார்களில் சிக்கியவர்.
வழக்குகள் என்ன ஆனது?
திமுக ஆட்சி அமைந்ததுமே விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை எகிற வைக்கும் வகையில் சில நாட்களில் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் ரெய்டும் நடத்தப்பட்டது. அதில் சுமார் 35 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், விஜயபாஸ்கர் மீதான வழக்கு விவகாரத்தில் இம்மியளவு கூட வேகம் தெரியவில்லை. இதனிடையே, குட்கா வழக்கில் மத்திய விசாரணை அமைப்புகள் கூட விஜயபாஸ்கர் வீட்டுக் கதவை தட்டின. ஆனால், அந்த வழக்கிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தான் இருந்து வருகிறது.
பரஸ்பரம் அமைதி ஏன்?
இந்த நிலையில் தான், சமீப காலமாக திமுகவுக்கு எதிரான விஜயபாஸ்கர் குரல் சுத்தமாக ஒலிப்பதில்லை என வருத்தத்தை கொட்டுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். முன்பெல்லாம் பொதுக்கூட்டம், பிரஸ் மீட் என எங்கு சென்றாலும் திமுகவை விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென அமைதி ஆனது ஏன்? என ரத்தத்தின் ரத்தங்கள் குழப்பத்திற்குள்ளாக, இன்னொரு பக்கம் திமுகவின் அமைச்சர் ரகுபதியும் கூட விஜயபாஸ்கரை பற்றி திருவாய் திறக்காதது உடன்பிறப்புகளை சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
குவாரி தான் காரணமா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்னொரு அமைச்சர் மெய்யநாதன் இருக்கும் நிலையில், அவரும் கூட விஜயபாஸ்கருக்கு எதிராக வாய் தவறி கூட பேசுவதில்லை என்கிறார்கள். எதிர் எதிர் அரசியல் கட்சிகளில் இருந்து கொண்டு எதிர்த்து கூட பேசாமல், விமர்சனம் கூட செய்யாமல் எப்படி கட்சியை வளர்க்க முடியும் என்ற கேள்வி அறிவாலய நிர்வாகிகளுக்கும், எம்.ஜி.ஆர். மாளிகை நிர்வாகிகளுக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியை விசாரிக்கும் போது சில தகவல்களும் தெரியவந்திருக்கிறது. தன் மீதான வழக்குகள், புகார்கள், நெருக்கடி காரணமாக ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற யோசனையில் விஜயபாஸ்கர் சைலண்ட் மோடில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், உள் அரங்கில் நடக்கும் கூட்டங்களில் மட்டுமே பேசி வரும் விஜயபாஸ்கர், பொதுக் கூட்டங்களில் பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டாராம். குறிப்பாக, உள்ளூர் திமுக அமைச்சர் ரகுபதியை எதிர்த்து கூட பேசுவதில்லை என குறைபட்டுக் கொள்கிறார்கள் அதிமுகவினர். இதற்கு முக்கிய காரணமே, விஜயபாஸ்கர் நடத்தும் குவாரி தான் என்கிறார்கள்.
அதிமுக-திமுக நட்புறவோடு...
குவாரி நடத்தி வரும் விஜயபாஸ்கர், தொழில் ரீதியாக எந்த பாதிப்பையும் சந்திக்க கூடாது என்பதற்காக ரகுபதியுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருவதாக சொல்லப்படுகிறது. முன்பு சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதி, கனிமவளத் துறைக்கு மாறியதில் இருந்து, அநியாயத்திற்கு இரு தரப்பும் கனிந்து பேசி வருகிறதாம். என்ன தான் அரசியலில் எதிரியாக இருந்தாலும் தொழில் ரீதியாக இருவரும் கை கோர்த்து இருப்பதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கியமான டெண்டர் அனைத்தும் விஜயபாஸ்கர் கை வசமே ஒப்படைக்கப்படுகிறதாம். தலைமையிலும், கீழ்மட்ட தொண்டர்களும் எதிர் எதிர் துருவமாக இருந்து வெற்றி பெற முயற்சி செய்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக-திமுக நட்புறவோடு தான் செயல்படுகிறது என சொல்லப்படுகிறது.
புதுகை மாவட்டத்தில் ஹாட் டாப்பிக்
அதோடு, வருகிற தேர்தலில் அமைச்சர் ரகுபதி திருமயம் தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படும் நிலையில், ரகுபதியின் வெற்றிக்கு மறைமுகமாக உதவவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறதாம். திருமயம் தொகுதி அதிமுகவில் டம்மி வேட்பாளரை நியமித்து, ரகுபதியின் வெற்றியை உறுதி செய்ய விஜயபாஸ்கர் தரப்பு முடிவு செய்திருக்கிறதாம். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இடையேயான இந்த மறைமுக டீலிங் அரசல், புரசலாக பேசப்பட்டு புதுகை மாவட்டத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved