Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே இயங்கி வந்த பிரபல பிளாஸ்டிக் கோணி தயாரிக்கும் நிறுவனமான விக்ரோ பாலிமர் (Vicro Polymer) ஊழியர்கள்,
நிர்வாகத்தின் அநீதியைக் கண்டித்து தொழிற்சாலை முன்பு லாரிகளைச் சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டது.
தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், தங்களுக்குச் சேர வேண்டிய பணிக்கால செட்டில்மெண்ட் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி கடந்த 9 மாதங்களாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாகத் தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளர் நீதிமன்றத்தில் (Labour Court) வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னரே, ஊழியர்களுக்குத் தெரியாமல் தொழிற்சாலையினுள் இருந்த இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருட்களை நிர்வாகம் ரகசியமாக வெளியேற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது.
நிறுவனத்திலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வெளியேற முயன்ற இரண்டு லாரிகளை அங்கு திரண்டிருந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்திச் சிறைபிடித்தனர்.
எங்கள் வாழ்நாளின் பெரும் பகுதியை இந்த நிறுவனத்திற்காக அர்ப்பணித்தோம். ஆனால், முறையான அறிவிப்பின்றி எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர்.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, சொத்துக்களைத் திருட்டுத்தனமாக வெளியேற்றுவது சட்டவிரோதமானது. எங்களுக்குச் சேர வேண்டிய நியாயமான இழப்பீடு கிடைக்கும் வரை ஒரு துரும்பைக் கூட இங்கிருந்து வெளியேற்ற விடமாட்டோம் என ஆவேசத்துடன் தெரிவித்தனர். இதனால் மறைமலைநகர் பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved