Also Watch
Read this
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கிரஷர் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில், ஒடிசா இளைஞர் கையை இழந்தார். துண்டிக்கப்பட்ட கையை, முறையாக எடுத்துச் செல்லாமல், பையில் போட்டு எடுத்துச் சென்ற அவலம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா இளைஞருக்கு விபத்து
சங்கரன்கோவிலில் சில தினங்களுக்கு முன்பு கல்குவாரியில் வேலை செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், விபத்தில் சிக்கி, வலது கை துண்டானது. அவர் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக துண்டான கையுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது கை உரிய முறையில் பாதுகாப்புடன் அனுப்பப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.

அழுகிப்போன கை
தென்காசியில் இருந்து துண்டிக்கப்பட்ட கையை, பையில் போட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால், அழுகிப் போன அவலம் நிகழ்ந்தது. துண்டிக்கப்பட்ட கையை 3 மணிநேரம் வெறுமனே பையில் வைத்து இருந்ததால், அழுகிப் போயுள்ளது. இதனால், ஒடிசா இளைஞரின் உடலில், கையை பொருத்த முடியாமல் போனதால், குடும்பத்தினர் கண்ணீர் வடித்தனர்.
மருத்துவமனை டீன் வேதனை
துண்டான கையை முறையாக பேக் செய்யாமல் வெறுமனே பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்தனர், செல்கள் இறந்துபோனதால் கையை பொருத்த முடியவில்லை என்று, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர். சிதைந்த நிலையில், சிமெண்ட், மணல் ஒட்டியபடி துண்டிக்கப்பட்ட கை இருந்ததால், பொருத்த முடியாமல் போய் விட்டதாக, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி வேதனையுடன் தெரிவித்தார்.

அழுகிப் போன கை - யார் பொறுப்பு?
சுமார் 3 மணி நேரம் பாதுகாப்பே இல்லாமல் கையை கொண்டு வந்ததால் உடலோடு பொருத்த முடியவில்லை. துண்டிக்கப்பட்ட கை சிதைந்த நிலையில் இருந்ததால், எங்களால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கைவிரித்தனர். துண்டிக்கப்பட்ட கையில் சிமெண்ட், மண் ஆகியவை ஒட்டிக் கொண்டிருந்தன. ஐஸ் கட்டியில் வைக்காமல், சுத்தம் செய்யாமல் துண்டிக்கப்பட்ட கையை கொண்டு வந்தனர். துண்டிக்கப்பட்ட கையை முறையாக சுத்தம் செய்யாமல், பையில் போட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் கை அழுகிப் போனது. இதற்கு யார் பொறுப்பு?
ஏழையின் உயிர் கிள்ளுக்கீரையா?
கிரஷர் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் கையை இழந்த ஊழியரின், துண்டிக்கப்பட்ட கையை முறையாக சுத்தம் செய்யாமல், சாக்குப்பையில் போட்டு எடுத்துச்சென்ற சங்கரன்கோவில் அரசு மருத்துவர்கள், துண்டிக்கப்பட்ட கையை அலட்சியப் போக்குடன் கையாண்டதால், கை அழுகிப் போன துயரம் நிகழ்ந்ததை, அம்பலப்படுத்தியது நியூஸ் தமிழ். ஏழையின் உயிர் கிள்ளுக்கீரையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆய்வுக்கு வந்த பெண் யார்?
இந்நிலையில், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல் கோட் அணிந்து கொண்டு ஆய்வு செய்த பெண் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
தவெக மருத்துவர் அணி எனக் கூறிக் கொண்டு சுற்றித் திரியும் பெண் மீது நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அண்ணன் ஆட்சியில்...
துண்டிக்கப்பட்ட கையை சாக்குப் பையில் போட்டு எடுத்துச் சென்றதை நியூஸ் தமிழ் அம்பலப்படுத்திய நிலையில், அப்படி எல்லாம் ஒரு சம்பவமே நடக்கவில்லை எனவும், தன்னை தவெகவின் மருத்துவர் அணி எனவும் கூறிக் கொண்டு விளக்கம் கொடுத்த பெண்ணால், ஏழைகளின் உயிரோடு விளையாடி விட்டு கூலாக பேசும் இவர்களை அனுமதித்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. அண்ணன் ஆட்சியில் அப்படி எல்லாம் நடக்காது என பெருமிதத்துடன் பேசும் இந்தப் பெண் குறித்து, அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தன.

மாவட்ட செயலாளர் ஆய்வு செய்ய சொன்னார்...
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக மருத்துவ அணி நிர்வாகி வாசுதேவி, தாம் நர்சிங் படித்து உள்ளதாகவும் வெள்ளை கோட் அணிந்து கொள்ளலாம் எனவும் வாதிட்டார். தவெக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன் அறிவுறுத்தலின் பேரில்தான், ஆய்வு செய்ததாகவும் வாசுதேவி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved