Also Watch
Read this
By: Manigandan Raja

பாகிஸ்தானில் இன்று 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை :
ஈரான் - அமெரிக்கா இடையே இன்று இரண்டு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது..! இரு நாடுகளும் அறிவித்த இடைக்கால போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதுவே இறுதி... அதன்பின் பேச்சுக்கே இடமில்லை :

ஈரானுடன் இன்று நடக்கும் பேச்சு வார்த்தையே இறுதி என்றும் அதன்பின் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானிடம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைக்க உள்ளதாகவும், அதை ஏற்காவிட்டால் அந்நாட்டின் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் தகர்த்து எறிவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தை புறக்கணிக்கும் ஈரான்?
பாகிஸ்தானில் இன்று நடைபெறும் அமெரிக்கா உடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அளவுக்கு மீறிய நிபந்தனைகள், அதிலும் தொடர்ச்சியாக செய்யப்படும் மாற்றங்கள் மற்றும் போர் நிறுத்தத்தை மீறி ஈரானில் உள்ள துறைமுகங்களை அமெரிக்க படைகள் முற்றுகையிட்டது ஆகிய காரணங்களால் பேச்சுவார்த்தையை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.
சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு :

அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது..! துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழு, ஈரான் குழுவிடம் இஸ்லாமாபாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு :
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 சிறார்கள் பலியாகினர். குடியிருப்பு பகுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 14 வயதுக்கு உட்பட்ட 8 சிறார்கள் உயிரிழந்த நிலையில் 2 பெண்கள் காயமடைந்தனர். சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீசார், தப்பியோட முயன்ற மர்ம நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
மனிதர்களுக்கும், ரோபோக்களுக்கும் இடையே மாரத்தான் :

சீனாவின் பெய்ஜிங்கில் மனிதர்களுக்கும், மனித உருவ ரோபோக்களுக்கும் இடையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வெற்றிப்பெற்றது. 21 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரோபோ 50 நிமிடங்கள் 26 வினாடிகளில் கடந்து அசத்தியது.
7 வாரங்கள் கடந்தும் உடலை அடக்கம் செய்யாமல் ஈரான் தயக்கம் :

ஈரான் உச்ச தலைவராக இருந்த முகமது அலி கமேனி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்து 7 வாரங்கள் கடந்தும், அவரது இறுதிச் சடங்குகளை நடத்தாமல் ஈரான் அரசு தாமதப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் போது ஏற்படும் பதற்றம், இஸ்ரேலிய தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளிட்ட சவால்கள் காரணமாக.
பொது இறுதிச் சடங்கை நடத்துவதற்கு ஈரான் அரசு தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மிகவும் பலவீனமான சூழலில் இருப்பதால் தற்போதைக்கு இறுதி சடங்கு நடத்த ஈரான் அஞ்சுவதாகவும் சொல்லப்படுகிறது.
தங்கள் உரிமைகளை பறிக்க டிரம்ப்புக்கு அதிகாரம் இல்லை :

ஈரானின் அணுசக்தி உரிமைகளைப் பறிக்க அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி வைத்திருக்கும் உரிமைகளை கொண்டிருக்க கூடாது என முடிவு செய்ய அவர்கள் யார் என அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் கேள்வி எழுப்பினார். ஈரானின் கண்ணியம் பாதிக்காத முறையில் போரை முடிவுக்குக் கொண்டுவரவே முயல்வதாகவும் மசூத் பெஸெஷ்கியான் கூறினார்.
பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த இந்திய கப்பல் :
இந்திய வணிக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய அதே நாளில், மற்றொரு இந்திய கப்பல் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்ததாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது..! 31 இந்தியர்களுடன் நீரிணையை கடந்த Desh Garima என்ற டேங்கர் கப்பல் நாளை மறுநாள் மும்பையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு இந்திய கப்பல்களில் உள்ளவர்களும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved