Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த இத்தாலி :

ஈரானுக்கு பதிலாக 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை இத்தாலி நிராகரித்து விட்டது. ஜூன் மாதம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஈரான் தேர்வாகியுள்ளது.
ஆனால், இதை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பாத நிலையில், அவருடன் இருக்கும் அதிகாரிகள் ஈரானுக்கு பதிலாக உலகக் கோப்பையில் கலந்து கொள்ளுமாறு இத்தாலியிடம் கோரிக்கையை விடுத்திருந்தனர். இக்கோரிக்கையை தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த வெளியேறிய இத்தாலி நிராகரித்து விட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவுக்கு இந்தியா கடும் கண்டனம் :

இந்தியாவும், சீனாவும் பூமியின் நரக குழிகள் என்ற சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கருத்து அறிவற்றவை, தரம் தாழ்ந்தவை மற்றும் பொருத்தமற்றவை என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கருத்துக்கள் முற்றிலும் தவறான தகவல்களை கொண்டவை எனவும் இந்தியா - அமெரிக்க உறவின் யதார்த்தத்தை இது பிரதிபலிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இந்தியாவை சிறந்த நாடு என்று பாராட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ரஷ்யா, ஓமனுக்கு ஈரான் அமைச்சர் பயணம் :

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான், ரஷ்யா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிராந்திய நிலவர முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்வதற்காக 3 நாடுகளுக்கும் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் போர் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், 2-வது கட்ட பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனைக்காக நட்பு நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக செல்வதாக கூறப்படுகிறது.
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்கள் :

போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், லெபனான் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே அமல்படுத்தப்பட்ட போர்நிறுத்தம், மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையின் தளவாடங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஓக்லஹோமா மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி :

அமெரிக்கவின் ஓக்லஹோமா மாநிலத்தில் குடியிருப்பு பகுதி மற்றும் விமானப்படைத் தளத்தை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கிய நிலையில் அப்பகுதிகளுக்குச் சூறாவளி அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு சுமார் 32 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த சூறாவளி, எனிட் நகரின் தெற்கே தரையிறங்கி, சுமார் 40 நிமிடங்களுக்குத் தரையிலேயே நிலைத்திருந்து பின்னர் விமானப்படை தளத்தை நோக்கி நகர்ந்து சென்றது.
விமானத்தை மின்னல் போல் சூறாவளி அப்பகுதியைக் கடந்து சென்றது. நல்வாய்ப்பாக இதில் விமானம் சேதமாகவில்லை. இருப்பினும் விமான தளத்தின் வேலிகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் சேதமானதாகவும், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதி கடும் அழிவைச் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
தலைநகர் மொகடிஷுவில் கொட்டத் தீர்த்த கனமழை :

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் ((Mogadishu)) கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. முழங்கால் அளவு தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்த வாகன ஓட்டிகள் நீரில் இறங்கி வாகனங்களை தள்ளிச் செல்லும் ஆளாகினர்.
கடலோர நகரமான மொகடிஷுவில் பருவ மழை காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், வடிகால் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வடகிழக்கு ஜப்பானின் மலைப்பகுதியில் காட்டுத் தீ :

வடகிழக்கு ஜப்பானில் இவாதே (Iwate) மாகாணத்தின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் ஆயிரம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மரம், செடி, கொடிகள் கருகின. கடந்த 22ஆம் தேதி பிற்பகலில் காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓட்சுச்சி (Otsuchi) நகரத்திற்கு அருகே மற்றொரு இடத்தில் தீ பிடித்தது. நகரின் மையப்பகுதியில் தீ பரவியதையடுத்து.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். காட்டுத் தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved