Also Watch
Read this
ஒவ்வொரு மாநிலத்திற்கும் 50 சதவீதம் என்ற அளவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக அமித்ஷா கூறுவது எப்படி? என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மசோதாவில் இருப்பது ஒன்றாகவும், அமித்ஷா கூறுவது வேறொன்றாகவும் இருப்பதால் மறுவரையறை செய்யாமல் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

மக்களவையில் கனிமொழி
தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஏப்ரல் 17ஆம் தேதி காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், இந்த மசோதா மீதான திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்.பி. கனிமொழி பேசியதாவது;
நாடாளுமன்ற உறுப்பினராகவோ, திமுகவின் பிரதிநிதியாகவோ நான் இங்கு நிற்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் 8 கோடி மக்கள் சார்பாக நான் இங்கு நிற்கிறேன். தமிழ்நாடு தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. தேர்தலுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மசோதாக்களை வாக்குப்பதிவுக்குப் பிறகு தாக்கல் செய்யலாம் என்ற எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

தமிழகத்தில் குரல்
தமிழகத்தின் குரல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் தமிழகத்தின் குரல் ஒடுக்கப்படுகிறது. இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. தொகுதி மறுவரையறை 1952ல் தொடங்கியது. நாட்டில் ஜனநாயகம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனம் நமக்கு இதை வகுத்துக் கொடுத்துள்ளது. மக்கள் தொகை அதிகரிக்கும்போது அதற்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.

ஏன் கலந்தாலோசிக்கவில்லை?
நாட்டில், மூன்றாவது தொகுதி மறுவரையறை அமல்படுத்தப்பட்ட போது மக்கள் தொகை கட்டுப்பாட்டை மத்திய அரசு வலியுறுத்தியது. இதை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தின. இதனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானாவில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தற்போது தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முயற்சி, திட்டமிட்ட அரசியல் செயல்பாடு. மாநில அரசுகள், மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு அமைப்பு அல்ல, அது நிறுவனமும் அல்ல. எஸ்ஆர் பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி உள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய - மாநில அரசுகளுக்கானது. தொகுதி மறுவரையறை மசோதா நியாயமானது என இந்த அரசுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் ஒவ்வொரு மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசிக்கவில்லை.

கேடயமாக வைத்து...
ஐந்த மாநில தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளது. 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடிதம் எழுதின. அதோடு, நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பின. தற்போது இந்த அரசால் இரண்டு வாரங்கள் கூட காத்திருக்க முடியவில்லை. மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்வது ஒன்றாக இருக்கிறது. மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரையறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?
தொடர்ந்து போராடுவோம்
25 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரு சிறப்பு கூட்டத்தின் மூலம் தீர்வு காண மத்திய அரசு அவசரப்படுகிறது. இந்த விஷயத்தில் அவசரம் கூடாது. இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். அங்கு இந்த மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அதன் அறிக்கையைப் பெற வேண்டும். அந்த குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும். இந்த மசோதாக்களுக்கு எதிராக எங்கள் தலைவர் ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றினார். ஆனால், நீலக் கொடியை ஏற்றினாலும் எங்களுக்கு கவலை இல்லை என ஆளும் தரப்பு கூறுகிறது. கருப்புக் கொடியை ஏற்றியதன் மூலம் நாங்கள் எங்கள் எதிர்ப்பை ஒரு அடையாள பூர்வமாகத் தெரிவித்துள்ளோம். இந்த மசோதாக்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நீல நிறம் என்பது அம்பேத்கர் காட்டியது. அவரது கொடியின் நிறம் அது. அவர்தான் அரசியல் சாசனத்தை கொண்டுவந்தார். நீங்கள் அதை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறீர்கள். நாங்கள் அதை பாதுகாக்க முயல்கிறோம்.

துணிவின் நிறம்
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை ஒரு திருஷ்டிப் பொட்டு என பிரதமர் கூறினார். காளி கருப்பு ஆடையை அணிபவர். துணிவின் நிறம் அது. நாங்கள் அந்த ஆடையை தேர்வு செய்துள்ளோம். கருப்பு பெரியாரின் நிறம். அவர்தான் எங்களுக்கு சுயமரியாதையை கற்றுத் தந்தார். இந்த மசோதாக்கள் விஷயத்தில் அரசு அவசரம் காட்டக்கூடாது. அரசு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved