Also Watch
Read this
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரியில் மு.க.ஸ்டாலின்
70 முதல் 75 வயது வரையிலான மீனவர்களுக்கு ஓய்வூதியம், மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான வயது வரம்பு 70 என்பன உள்ளிட்ட புதிய வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களைக் குறிவைத்து FCRA என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக முதலமைச்சர் குற்றம் சாட்டினார். சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பது போல் காத்ததாகக் கூறும் இபிஎஸ், FCRA மசோதாவை எதிர்ப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். நரேந்திரமோடி பிரதமரான பிறகும் கூட தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்வதாக சுட்டிக் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் எனக் கூறிய மோடி, தற்போது தம்மையும் பலவீனமானவர் என ஏற்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ஈரோடு, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை தொடர்ந்து, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி பகுதியில் ஆறு வேட்பாளர்களை ஆதரித்து நாகர்கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். "சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டால், சின்ன குழந்தையும் சொல்லும் திமுக தேர்தல் அறிக்கைன்னு" என்று பாடல் பாடி சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையை மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.

திமுக வாக்குறுதிகள்
கன்னியாகுமரிக்கு திமுக அரசு கொடுத்த திட்டங்களை கூற ஒரு நாள் போதாது என்று கூறி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் கண்ணாடி பாலம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு 400 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு என 30 அரசுத் திட்டங்கள் நடைபெற்றதாக கூறி, சிலவற்றை பட்டியலிட்டார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை 2,000 ரூபாய், பால் கொள்முதல் விலை 5 ரூபாய் உயர்த்தப்படும், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கேரண்டி இல்லாமல் 5 லட்சம் ரூபாய் கடன் உதவி, வீட்டு உபயோகப் பொருள் வாங்க கூப்பன் தொகையாக 8,000 ரூபாய் என்று திமுக தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டார்.

மீனவர்களுக்கான திட்டங்கள்
மீனவர்கள் அதிகமுள்ள குமரியில், அவர்களுக்கான ஏராளமான நலத் திட்டங்கள், திமுக ஆட்சியில் தான் நிறைவேறியுள்ளது என்றும் மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தப்பட்டதையும் மீன்பிடிப்பு துறைக்காக செய்த ஏராளமான திட்டங்களுடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீன்பிடி தடைகால நிவாரணம் 12,000 ரூபாய் ஆக உயர்த்தப்படும் எனவும் உறுதிமொழி தந்தார். 65 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள மீனவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவிற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தவன் நான். வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட திருத்தம் மத சுதந்திரத்திற்கு எதிரானது. கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு எதிரான கொடுங்கோல் சட்டத் திருத்தம் எனவும் வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்ட திருத்தத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்றும், மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது திமுக மரியாதை கொண்டுள்ளதாகவும் கலைஞர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக இபிஎஸ் தவறாக பேசுவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், "சொல்வதை செய்வோம், நான் கலைஞர் மகன்" எனக்கூறி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved