புதுக்கோட்டை மாவட்டம், குளவாய்ப்பட்டி கிராமத்தில் வாரியை ஆக்கிரமித்து சுவேதா கிரஷர் நிறுவனம் நடத்தி வரும் கல்குவாரி ஊரையே சின்னாபின்னமாக ஆக்கிய நிலையில், மீண்டும் புதிய கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பெட்ரோல், டீசல் கேனுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு ஆண்டுகளாக பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குவாரிக்குள் இறங்கி போராடினர். * குளவாய்ப்பட்டி கிராமத்தில் வாரியை ஆக்கிரமித்து கல்குவாரி * 200 அடி ஆழத்துக்கு கற்களை வெட்டியெடுக்கும் நிறுவனம்? புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை அருகே குளவாய்ப்பட்டி குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் குளத்துக்கு செல்லும் குவாரியை, சுவேதா என்ற கிரஷர் நிறுவனம் கைப்பற்றி வைத்துக்கொண்டு 200 அடி ஆழத்துக்கு சட்டவிரோதமாக கற்களை வெட்டியெடுப்பதாக சொல்லப்படுகிறது. கற்களை வெட்டி எடுக்க எடுக்க குவாரியை சுற்றியுள்ள மலையடிப்பட்டி, அய்யாபட்டி, வெள்ளபிள்ளையார்பட்டி, மேலப்பட்டி, ராசா பட்டி, செங்களுர் விசலூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து வறண்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் குடிநீர் மாசு ஏற்பட்டு சிறுநீரக பிரச்சனை, சுவாச பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். * குவாரியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்பட்ட வறட்சி * வெடிமருந்துகளால் குடிநீர் மாசடைந்து சிறுநீரக, சுவாச பிரச்சனைஇந்நிலையில் தான், குவாரிக்கு 100 மீட்டர் தூரத்தில் 6 ஏக்கரில் மற்றொரு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், அது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்துகளை கேட்க கீரனூர் காவல்நிலைய துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்களிடம் கருத்து கேட்பதை விடுத்து குவாரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு போலீசார் அடாவடியாக நடந்து கொண்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, பிரச்சனையை இழுத்தால் கைது செய்வோம் எனவும் மிரட்டி மக்களை அச்சுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை கண்டித்து மக்கள் குவாரிக்கு பெட்ரோல், டீசல் கேனுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். * குவாரிக்கு 100 மீட்டர் தூரத்தில் 6 ஏக்கரில் புது கல்குவாரி அமைக்க அனுமதி* குவாரி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டு காவல்துறை அடாவடிமுன்பெல்லாம் குவாரியில் அதிகளவில் மீன் வகைகள் இருக்கும் நிலையில் தற்போது அந்த குவாரியை சீரழித்து விட்டதாக குற்றம்சாட்டும் மக்கள், குவாரி நீரை குடித்தாலே கால்நடைகள் இறந்துவிடுவதாக குமுறினர். இந்த குவாரியை மூடுவதற்கு நான்கு ஆண்டாக வட்டாட்சியர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மனுக்களை அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அக்குவாரியின் 500 மீட்டர் தொலைவில் குளவாய்ப்பட்டி குக்கிராமம் உள்ளதை மறைத்து சட்டவிரோதமாக குவாரியை நடத்தி வருவதாகவும் பகீரை கிளப்பினர். * பெட்ரோல், டீசல் கேனுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்* எந்த அறிவிப்புமின்றி வேட்டு வைப்பதாக மக்கள் குற்றச்சாட்டு எந்த அறிவிப்புமின்றி, தான் தோன்றித்தனமாக குவாரியில் வேட்டு வைப்பதால் அவ்வழியே செல்வோர் மீது கல் விழுந்து, அடிபடும் நிலை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. புதிதாக குவாரியை தொடங்க பர்மிஷன் வாங்கியுள்ள அரசு அதிகாரிகள், பழைய குவாரியை மூட பர்மிட் கொடுக்கவில்லை என நிர்வாகம் கூறுவதாக மக்கள் குற்றம்சாட்டினர். * விளைநிலங்களை குவாரி நிர்வாகம் மிரட்டி வாங்குவதாக பகீர்* 100 ஏக்கரை அந்த நிர்வாகம் வளைத்துப் போட்டதாக குற்றச்சாட்டு குவாரிக்கு அருகிலுள்ள விளைநிலங்களை குவாரி நிர்வாகம் மிரட்டி வாங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இடத்தை கொடுக்க மறுத்தால் அந்த இடத்துக்கு அருகேவுள்ள குவாரி பகுதியில் ஆழமாக தோண்டி நீர் ஊற்றை கெடுத்து, தாங்களாகவே இடத்தை ஒப்படைக்கும்படி நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது போல் 100 ஏக்கரை அந்த நிர்வாகம் வளைத்து போட்டதாக மக்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அரசு அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு நீர்நிலைகளை அந்நிர்வாகம் கெடுத்து குட்டிச்சுவராக ஆக்கிவிட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். இயற்கை வளங்களை வாரி சுருட்டிக்கொண்டு செல்வத்தில் கொழிக்கும் கனிமவள கொள்ளையர்களுக்கு எதிராக அரசு எடுக்க போகும் நடவடிக்கை ஒன்றையே குளவாய்ப்பட்டி குக்கிராம மக்கள், எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். Related Link எங்களை அடிக்க யாரு அதிகாரம் குடுத்தா?