முல்லை பெரியாறு அணை பராமரிப்பில், மேற்பார்வை குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலில் அணை பராமரிப்புக்கு அனுமதி வழங்குவதாக கூறிய கேரளா, பின்னர் மறுத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அணை விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றபோதும், அதை செயல்படுத்த கேரளா முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அணை பராமரிப்பு, அதற்கான ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்ட மேற்பார்வை குழு பரிந்துரைகளை 2 வாரத்தில் செயல்படுத்த உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.