தீபாவளி பண்டிகையன்று தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளையொட்டி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2-ம் தேதி தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.