Also Watch
Read this
By: Manigandan Raja

முக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக ஸ்டோக்ஸ் விளக்கம் :
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்சின் முகம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளான நிலையில், அதற்கு ஸ்டோக்ஸ் விளக்கமளித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது முகத்தில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், தற்போது நலமுடன் உள்ளதாகவும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
லா லிகா கால்பந்து தொடர் - பார்சிலோனா அணி வெற்றி :

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா((La Liga)) கால்பந்து தொடரில், ஸ்பெயினின் கெட்டாபே ((Getafe )) அணியை வீழ்த்தி பார்சிலோனா அணி அசத்தல் வெற்றி பெற்றது. முதல் பாதியில் 45ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் பெர்மின் லோபஸ்((Fermín López)) கோல் அடித்து அசத்தினார்.
அதேபோல் இரண்டாவது பாதியில் 75ஆவது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த மார்கஸ் ராஷ்போர்டு ((Marcus Rashford )) கோல் அடிக்கவே, 2க்கு 1 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 85 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
சென்னை அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் :
ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ருத்ராத் கெய்க்வாட் மட்டும் 74 ரன்களை சேர்த்தார். பின்னர் ஆடிய குஜராத் அணி 16.2 ஓவரில் 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மகளிருக்கான டி20 தொடரின் 4 வது போட்டி :

தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட மகளிருக்கான டி20 தொடரின் 4 வது போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 171 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஏற்கனவே 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென்ஆப்பிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
அதிகாரப்பூர்வ மாரத்தான் போட்டியில் புதிய சாதனை :

லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 42.2 கிலோமீட்டர் தூரத்தை அதிவேகமாகக் கடந்து முதலிடம் பிடித்த கென்யாவின் செபஸ்டியன் சாவே புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த மாரத்தானில் பங்கேற்ற அவர், அதிகாரப்பூர்வ மாரத்தான் போட்டியில் 42.2 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 59 நிமிடங்கள் 30 வினாடிகளில் கடந்து 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக 2023-ல் சிகாகோவில் நடைபெற்ற மாரத்தானில் மறைந்த கெல்வின் கிப்டம் 2 மணி நேரம் 35 வினாடிகளில் இலக்கை எட்டியது சாதனையாக இருந்த நிலையில், அதனை அவர் முறியடித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved