கிழக்கு லடாக் எல்லையில் இருந்து இருதரப்பு படையினர் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், நேரடி விமானப் போக்குவரத்தை துவக்குவது, முடங்கியுள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரையை துவக்குவது உள்ளிட்டவற்றில் இந்தியாவும் சீனாவும் உறவை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.இரண்டு நாட்கள் சீனப்பயணமாக பெய்ஜிங் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சக செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அங்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகளை சீரமைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் பத்திரிகை குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தூதரக உறவுகள் துவக்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், கசானில் பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகள் சீரமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.