Also Watch
Read this
Posted on: Feb 12, 2026 06:24 AM
By: Manigandan Raja
மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமூக வலை தள பக்கத்தில் பதிவு
தொழிலாளர்கள், விவசாயிகளின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு:
நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காக தெருக்களில் இறங்கி இன்று குரல் கொடுத்து கொண்டுள்ளனர். நான்கு தொழிலாளர் சட்டங்களும் தங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்களும், வர்த்தக ஒப்பந்தங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று விவசாயிகளும் அஞ்சுகின்றனர்.
நான் உறுதியாக நிற்கிறேன்
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களின் கடைசி ஆதரவையும் பறித்துவிடும். அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. பிரதமர் மோடி தற்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான அழுத்தம் மிகவும் வலுவாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் போராட்டத்துடன் நான் உறுதியாக நிற்கிறேன்
இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
கோரிக்கைகள்...
நான்கு தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் விரோத கொள்கைகளை கைவிடக் கோரி, நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved