மணிப்பூர் மாநிலத்தில், வன்முறையால் புலம் பெயர்ந்த மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கடந்த 2023ல் நடந்த இனக் கலவரம், அம்மாநிலத்தின் இரு சமூகத்தினரிடையே பிளவை அதிகரிக்க செய்தது. இதனால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. நிலைமையை சரி செய்ய மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், இனக்கலவரம் ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூருக்குச் சென்றார்.இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்த இடங்களில் ஒன்றான சுராசந்த்பூரில், பிரதமர் மோடி, வன்முறையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.பின்னர் முகாமில் இருந்த மக்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் நிலம் மணிப்பூர். இங்குள்ள மலைகள் இயற்கையின் விலை மதிப்பற்ற பரிசு. இவை, உங்கள் தொடர்ச்சியான கடின உழைப்பைக் குறிக்கின்றன. மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்கு தலை வணங்குகிறேன். மணிப்பூரில் வளர்ச்சியைக் கொண்டுவர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, தற்போது 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.மணிப்பூர் சர்வதேச எல்லையைக் கொண்ட ஒரு மாநிலம். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, மணிப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்த நான் பணியாற்றினேன். மணிப்பூரின் ரயில் மற்றும் சாலை இணைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தியுள்ளோம். வரும் காலங்களில், முழு வட கிழக்குக்கும் பிரகாசத்தை, மணிப்பூர் அதிகரிக்கும். இங்கு, செயல்படுத்தப்படும் திட்டங்கள் மணிப்பூர் மலைகளில் வாழும் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். மணிப்பூர் மக்கள் அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் கல்விக்கான புதிய வசதிகளை வழங்கும்.வளர்ச்சிக்கு அமைதி மிக மிக முக்கியம். பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள குழுக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்ற, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களுடன் இருக்கிறேன்; மத்திய அரசு உங்களுடன் இருக்கிறது. மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இடம் பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் மத்திய அரசு, மணிப்பூர் அரசுக்கு தொடர்ந்து உதவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார். முன்னதாக, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இம்பால் விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக 65 கிமீ பயணித்து சுராசந்த்பூர் சென்ற பிரதமர், அங்கு பெரும்பான்மையாக உள்ள குகி இன மக்களை சந்தித்தார். பின்னர் மெய்தி மக்கள் பெரும்பான்மையாக உள்ள இம்பாலிலும், புலம்பெயர்ந்த மக்களை சந்தித்தார்.