Also Watch
Read this
By: Web Team

புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோயில்களில் குவிந்த பக்தர்கள், விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம்: திருவாடானையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆஞ்சநேயப் பெருமானுக்கு பல்வேறு மங்கலப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் அமைதியுடனும், ஒழுங்குடனும் வரிசையில் நின்று, இறைவனை தரிசித்து, பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர்.
திண்டுக்கல்: மலையடிவார சீனிவாச பெருமாள் கோயிலில், சொர்ண அலங்காரத்தில் ஜொலி ஜொலித்த பெருமாளை பக்தர்கள் வணங்கிச் சென்றனர். 400 ஆண்டுகளுக்கு மேல், பழமையான சீனிவாச பெருமாள் கோயிலில், உற்சவருக்கு சுமார் ரூ.1 லட்சம் நோட்டுகளால், சொர்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி: துறையூர் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், புரட்டாசி சனிக்கிழமை உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு, திருக்கல்யாண கோலத்தில், சேவை சாதித்தார். அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ’கோவிந்தா கோவிந்தா’ கோஷம் முழங்க படிகளிலும் சாலை வழியாகவும் சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். 
திருப்பத்தூர்; அக்ரஹாரம் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் மலைப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, இன்று பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர், இந்த பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சேலம்: வாழப்பாடியில், சென்றாய பெருமாள் மற்றும் மாயவன் கோயில்களில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குழந்தை வரம் வேண்டி சென்றவர்களில், இரண்டு தம்பதியர் தங்களுக்கு குழந்தை பிறந்தவுடன் குழந்தையை மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீமாயவன் கோயிலில், குழந்தைக்கு நிகராக எடை காணிக்கை செலுத்தி துலாபாரம் செய்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வாழப்பாடி சந்தை திடல் அருகே அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயிலிலும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்: பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை மதனகோபால சுவாமி கோயிலில், அபிஷேக ஆராதனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதனகோபால சுவாமி உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை; 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த பெருமாளை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அருணாச்சலேஸ்வரர் கோயிலின் மாட வீதியில் வடக்கு பகுதியில் குபேர மூலையில் வீற்றிருக்கும் ஶ்ரீபூத நாராயண பெருமாளை, புதன், சனிக்கிழமைகளில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.