மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஒரே சிரஞ்சை பயன்படுத்தி நோயாளிகள் பலருக்கும் ஊசி போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட செவிலியரை பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டவர்களுக்கு செவிலியர்கள் ஒரே சிரஞ்சை பயன்படுத்தி ஊசி போடுவதாக எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன், தனது தாயார் கல்யாணிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் கல்யாணி அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த செவிலியர் சௌமியா, நோயாளிகளுக்கு ஊசி போடும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிரஞ்ச்-களை பயன்படுத்தாமல் ஒரே ஒரு சிரஞ்சை மட்டும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அவசர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் செவிலியரின் அலட்சியத்தை நோட்டமிட்ட கல்யாணியின் மகன் ஹரிஹரன், ஏன் ஒரே சிரஞ்சை அனைவருக்கும் பயன்படுத்துகிறீர்கள் என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஹரிஹரன் அடுக்கடுக்காக எழுப்பிய கேள்விகளுக்கு செவிலியர் மழுப்பலான பதில் அளித்த நிலையில், இது தொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதனடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் பானுமதிக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பணியில் செவிலியர் அலட்சியம் காட்டியது, விசாரணையில் உறுதியானதால், அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து மருத்துவ பணிகள் கழகம் உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற செயல்களில் எந்த செவிலியர்களும் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடும்பட்சத்தில் தொடர்புடைய செவிலியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.