80’ஸ் கிட்ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரை அனைவரது பிளே லிஸ்டிலும் இளையராஜாவின் பாடல்களே அதிகம் இடம் பிடித்திருக்கும். எல்லா வகையான சுச்சுவேஷன்களுக்கும் மிக கட்சிதமாக பொருந்தும் தன்மை கொண்ட இளையராஜாவின் பாடல்கள் பலருக்கும் ஆத்மார்த்தமான ஆறுதலை தரக்கூடியவை.இந்நிலையில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அதில் 1997ஆம் ஆண்டு இளையராஜா அவரது மனைவி பெயரிலான இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தின்படி தேவர்மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை மியூசிக் மாஸ்டர் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் தங்கள் அனுமதி இல்லாமல் அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறும் மியூசிக் மாஸ்டர் நிறுவனம் தங்களின் அனுமதி பெற்றுத்தான் பயன்படுத்த வேண்டும் எனவும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் எதிர் மனு தாரர்களாக இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அப்துல் குத்தூஸ் முன் நடைபெற்ற நிலையில், ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் இளையராஜா நேரில் ஆஜரானார். 109 படங்கள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்த இளையராஜா, அது தொடர்பான சாட்சியத்தையும் அளித்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர் ஆன இளையராஜாவிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்ட நிலை இளையராஜா சாட்சி கூண்டில் ஏறி ஒரு மணிநேரத்திற்கு மேலாக பதிலளித்தார். அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன.குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு இளையராஜா, எனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகலாவிய பொருட்கள் பற்றி எனக்குத் தெரியாது என பதில் அளித்துள்ளார்.பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா என்ற கேள்விக்கு, அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது தான் என இளையராஜா பதிலளித்தாக கூறப்படும் நிலையில் இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.