Also Watch
Read this
தமிழக முதல்வராக பதவி ஏற்ற விஜய் பேசும்போது, கடன் சுமை, வெளிப்படைத்தன்மை, பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு, கல்வி மருத்துவம் மீது கவனம் செலுத்துவேன் என்று உறுதி அளித்தார்.
தமிழக முதல்வராக விஜய்
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் இன்று மே 10ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன் பிறகு மேடையில் முதல்வர் விஜய் பேசியதாவது;
எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும்.
முதல்வர் விஜய் உருக்கம்
மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர். நீ வா தம்பி... நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளீர்கள்.

என்னுடன் இருந்தீர்கள்
இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள். என்னை முதல்வராக ஆக்கி உள்ளீர்கள் என்னுடைய உறவுகளே, சொந்தங்களே நான் தேவதூதன் கிடையாது. அது செய்வேன், இது செய்வேன் எனச் சொல்லி ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியம் என்பதை மட்டுமே செய்வேன்.
வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்
தமிழ்நாட்டில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்று உள்ளனர். அப்படியான ஒரு நிலையில் தான் இந்த பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன். அரசிடம் என்ன இருக்கிறது எது இல்லை என்பது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். அதை தான் முதலில் செய்ய இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு, மறைவு இன்றி செய்வேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் கூறியதை படிப்படியாக நிறைவேற்றுவேன்.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி, தவறு செய்ய விடமாட்டேன். என் தலைமையில் தான் முழு அதிகாரமும் இருக்கும். பெண்கள் பாதுகாப்பை ஸ்ட்ரிக்ட்டாக வைத்து இருப்பேன். போதைப்பொருள் தடுப்புக்கு உரிய முயற்சி எடுப்பேன். சட்டம் -ஒழுங்கு மூலம் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்வேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தான்.
தவெக அரசு உடன் நிற்கும்
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த தவெக அரசில் நன்றாக இருப்போம். சிறுபான்மை சகோதரர்களுக்காக இந்த அரசு உடன் நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம். இந்த விஜயை நம்பலாம். என்னுடைய குட்டி நண்பர்களால் தான் இது நடந்திருக்கிறது. அவர்களுக்கு நன்றி. அவர்களின் வருங்காலத்துக்கு ஏற்ற விஷயங்களை செய்து கொடுப்பேன்.
இவ்வாறு அரங்கம் அதிர முதல்வர் விஜய் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved