Also Watch
Read this
Posted on: Feb 19, 2026 07:01 AM
By: Manigandan Raja
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், தேமுதிக எந்தப் பக்கம் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், யாரும் எதிர்பாராத நகர்வாக திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.
முதல்வருடன் சந்திப்பு
சென்னையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பிப்ரவரி 19ஆம் தேதி காலை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தினர். இந்த சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் இருந்தனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேர திருப்பமாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக போட்டியிட உள்ளது. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை திமுக கூட்டணியில் இணையாத தேமுதிக, முதல் முறையாக இணைந்திருப்பது, திமுக கூட்டணிக்கு பலம் சேர்த்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
திமுக உடன் கூட்டணி அமைத்தது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது;
தேமுதிக, யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக பதில் வழங்கியுள்ளோம். தேமுதிக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் விருப்பத்தின் பேரில் திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
விஜயகாந்த் இல்லாத நிலையில், திமுகவுடன் கூட்டணி
விஜயகாந்த் இருக்கும்போதே 2016ல் அமைய வேண்டிய கூட்டணி இது. பழம் நழுவிப் பாலில் விழுந்தது என்று அப்போது கருணாநிதி கூறினார். தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தேமுதிக சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசுவதற்கு குழு அமைத்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்த பிறகு, தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அண்ணன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். இன்றிலிருந்து திமுக உடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்பதை உறுதி செய்துள்ளோம்.
எங்களின் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.
இவ்வாறு பிரேமலதா தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பதிவு
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவு;
முத்தமிழறிஞர், தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் Vijayakanth உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் @PremallathaDmdk அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்.
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved