தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்பில், தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.தொழில்துறையில் வேலை வாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள சமூக வலை தளப்பதிவு:இந்திய அரசின் 2023–24ஆம் ஆண்டுக்கான தொழில்துறை ஆய்வின்படி, தொழில்துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் இதில் உள்ளனர். இது நாட்டின் ஆறு தொழிற்சாலை தொழிலாளர்களில் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 5-6% பேர் மட்டுமே உள்ளனர். தமிழ்நாடு, 40,100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டு, மீண்டும் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, இது தேசிய பங்கில் 15.43% ஆகும்.எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த மறுப்பு. எங்கள் தரவுகளுடன் அல்ல, ஆனால், இந்திய அரசாங்கத்தின் தரவுகளுடன்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த பதிவை, தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு உள்ளது. திரு. அமித்ஷா முதல் திரு. பழனிசாமி வரை திமுக ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பாஜக அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ. சட்டம் - ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதி என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து, நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது. #Dravidian Model ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும். அரசியல் காழ்ப்புணர்வில் திமுக ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.