Also Watch
Read this

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் ஆண்ட மேற்கு வங்கத்தில் முதன்முறையாக அதிகாரத்துக்கு வந்தது பாஜக. பவானிபூர் தொகுதியில் மம்தாவை தோற்கடித்த சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பதவியேற்றார்.
பிரதமர் மோடி பங்கேற்பு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துக்களை கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

பாஜக மாநில முதல்வர்கள்
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் மோடி மேடையில் இருந்த 98 வயதான மூத்த பாஜக தொண்டர் மகான்லால் சர்க்காரிடம் ஆசி பெற்றார்.

207 இடங்களில் பாஜக வெற்றி
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15 ஆயிரத்து115 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஒரு தொகுதி கூட இல்லை
மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 ஆக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

9 மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. இன்று மே 9ஆம் தேதி, பாஜக ஆட்சியில் அமரும் நாள் என்பதால் விழாக்கோலம் பூண்ட மேற்குவங்கத்தின் கொல்கத்தா மாநகரம் காண்போரைக் கவர்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved