Also Watch
Read this
Posted on: Feb 14, 2026 11:23 AM
By: Manigandan Raja
அசாம் மாநிலத்தின், மோரான் பகுதியில் சீன எல்லைக்கு அருகே சாலையில் போர் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் தரையிறங்கிய C-130J போர் விமானத்தில் பயணித்தார் பிரதமர் நரேந்திரமோடி.
Emergency Landing Facility-ELF
வரலாற்று சிறப்பு மிக்க முதல் நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காலை அசாம் மாநிலத்தின் மோரானில் உள்ள அவசர தரையிறங்கும் வசதியில் (Emergency Landing Facility) தரையிறங்கியது. இது மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் பகுதி, அசாமின் மோரான் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக தரையிறங்கி இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஒரு நாள் பயணமாக...
அசாம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக வந்துள்ளார். போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் இந்திய விமானப்படையின் 40 நிமிட வான்வழி காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இதுவே முதல்முறை
பிரதமர் மோடி, சாபுவா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை அசாம் ஆளுநர் லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் வரவேற்றனர். சாபுவாவிலிருந்து, திப்ருகார் மாவட்டத்தில் உள்ள மோரன் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அவசர தரையிறங்கும் வசதிக்குச் செல்ல இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் பிரதமர் ஏறினார்.
ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட 4.2 கிமீ நீள வசதியில் அவர் தரையிறங்கினார். வடகிழக்கு பிராந்தியத்தில் இதுபோன்ற உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
விமான ஓடுபாதை சாலையில் சாகசம்
அசாம் மாநிலத்தில், அமைந்துள்ள விமான ஓடுபாதை சாலையில் சாகசம் நிகழ்த்திய போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள். விமான ஓடுபாதை சாலையின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடிக்கு விமானப் படை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved