கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்த பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களியக்காவிளை போலீசார் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி (42 வயது). தமிழக காவல்துறையில் கடந்த 2003 ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது பல்வேறு காவல் நிலையங்களில் பணி புரிந்து வந்த இவர் கடந்த 2021 ம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது மனநோயால் பாதிக்கப்பட்டு இது நாள் வரை விடுப்பில் இருந்து வந்துள்ளார். இவரது கணவரும் மனநோய் பாதிக்கப்பட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் இருந்து எழும்பிய குழந்தை தாயார் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் போய் கூறி உள்ளார். இதனை கேட்ட அக்கம்பகத்தினர் ஓடி வந்து பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து உள்ளனர். தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் மினியை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டு களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு திரும்ப சென்றுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் இறந்த பெண் காவலரின் கணவர் வீட்டின் ஒரு ஓரத்தில் பிரம்மை பிடித்தது போல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த மோப்ப நாய் வேறெங்கும் செல்லாமல் வீட்டை சுற்றியபடியே சிறிது நேரம் நின்றது. அதே நேரத்தில் அவரது கணவரிடம் அந்த மோப்ப நாய் செல்லவில்லை. இதனையடுத்து போலீசார் பெண் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநோய் பாதிப்புக்குள்ளாகி விடுப்பில் இருந்த பெண் காவலர் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.