திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும், தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் அக்னி, சூரியன் ,சந்திரன் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்நிலையில், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு தீர்த்தக்கரையில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து, அஸ்திர தேவர் மூன்று தீர்த்த குளங்களிலும் தீர்த்தம் அளிக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திரளான பக்தர்கள் தீர்த்த குளங்களில் நீராடி வழிபட்டனர்.