Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 07:28 AM
By: Fyrose Banu

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள மலைக்காட்டு பகுதியான கீழ்பில்லூர் என்னுமிடத்தில் நேற்றிரவு காட்டு யானைகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் தந்தம் உடைந்த நிலையில் ஒரு ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பயங்கரமாக பிளிறிய யானைகள்
தமிழக-கேரள எல்லையில் வனம் சார்ந்த பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணையை சுற்றி இருபதிற்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள கீழ்பில்லூர் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்றிரவு காட்டு யானைகள் பயங்கரமாக பிளிறியதை அங்குள்ள பழங்குடியின மக்கள் கேட்டதாக கூறப்படுகிறது.
பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த காட்டு யானை
இந்நிலையில், இன்று காலை கீழ்பில்லூர் மலைக்கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆண் யானையொன்று பலத்த காயங்களுடன் இறந்து கிடைப்பதை கண்ட உள்ளூர் மக்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
யானைகளுக்கிடையே மோதல்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நடத்திய முதற்கட்ட ஆய்வில் இரு பெரிய ஆண் யானைகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு யானையின் ஒரு தந்தம் உடைந்து கழுத்து உள்ளிட்ட இடங்களில் மற்றோரு யானையின் தந்தங்களால் குத்துப்பட்டும் பலத்த காயமடைந்த காரணத்தினால் இறந்துள்ளதை கண்டறிந்தனர். இது குறித்து தங்களது மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ள வனத்துறையினர் இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved